குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்துவரும் பெரு மழையால்
கோதையாற்றில் தண்ணீரின் பெருக்கொடுத்து ஓடியது. அந்த பெரு வெள்ளத்தின் நடுவே உள்ள பாறையில் சிக்கிய ஒரு தெருநாய், அந்த நாயை தீயணைப்பு துறையினருடன் இணைந்து பொதுமக்கள் மீட்டனர்.
குமரி மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் முக்கிய அணையான பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் கோதையாற்றிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோதையாற்றின் திற்பரப்பு அருவியின் கீழ் பகுதியில் ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நாய் ஒன்று ஆற்றை கடக்க முடியாமல் சிக்கியது.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக குலசேகரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றின் குறுக்கே கயர்களை அமைத்து அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நாயை பத்திரமாக மீட்டனர்.
கரை சேர்ந்த நாய் அதன் இயல்பு நிலையில் நடக்க முடியவில்லை .பெரும் வெள்ளத்தில் சிக்கிய நாயை மீட்க முனைப்பு எடுத்த அந்த பகுதி இளைஞர்கள், அந்த நாயை மீட்க உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து மீட்டது இன்று குமரி மாவட்டத்தில் பொது மக்களிடையே ஒரு பாராட்டு செயலாக பரவுகிறது.