• Fri. Apr 26th, 2024

தென்மாவட்ட ஜாதி அரசியல் பேசும் ராவண கோட்டம் சாந்தனு கனவு நனவாகுமா?

கண்ணன் ரவி குருப்சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”.

வரும் மே 12-ம் தேதியன்று இத்திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் பேசும்போது,
“மதயானைக் கூட்டம் படத்திற்குப் பிறகு நான் வேலை செய்ய வேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்த ஒரு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சார். அது நடந்துவிட்டது.

ஷாந்தனு நடிகராக மட்டும் இல்லை. இப்படத்தில் அனைத்து வேலைகளையும் செய்தார். கண்ணன் சார் போன்ற சிறப்பான தயாரிப்பாளர் வருவது சினிமா துறைக்கு மிகவும் ஆரோக்கியமானது. அவருக்கு எனது வாழ்த்துக்கள். படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அனைவருக்கும் நன்றி…” என்றார்.

நடிகர் சஞ்சய் பேசும்போது,

“எனக்கு இந்த மேடை புதியது.. நான் 12 வருடங்களாக பல படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு வரம். இயக்குநர் சுகுமாரன் சாருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். இந்தப் படத்திற்காக நிறைய இரத்தம் சிந்தி நடித்துள்ளேன். நான் மட்டும் அல்ல; அனைவரும் அப்படித்தான் நடித்தனர். இந்த படத்தின் வாழ்வியல் அம்சங்கள் அப்படி அமைந்துள்ளது, அதற்கு நாங்கள் ஈடு செய்ய வேண்டும் என்று எண்ணினோம். இயக்குநர் என்னைப் பெரிய அளவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தார், எனக்கு அவர் அண்ணனாக இருக்கிறார். அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் அனைவரும் எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்தனர். நான்கு வருட போராட்டம் என்றே சொல்லலாம். இரவு, பகல் பாராமல் அனைவரும் உழைத்துள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி…” என்றார்.

நடிகை தீபா பேசும்போது,

“இந்த இராவண கோட்டம் படத்தில் நடித்து வந்தது பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்தது போல இருந்தது. சுகுமார் சாரிடம் ஒரு நாள் நடித்தாலும் நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக் கொள்ளலாம். இளவரசு அண்ணனின் பேச்சை நான் பல இடங்களில் ரசித்துக் கேட்பேன். இப்படத்தில் அவருடன் பணி புரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. தம்பி ஷாந்தனு என்னுடன் சகஜமாக பழகி வந்தார். அதற்கு நன்றி, படக் குழுவினர் அனைவருக்கும் நன்றி…” என்றார்.

நடிகர் இளவரசு பேசும்போது,

“இந்தப் படத்தின் கலை இயக்குநர் நர்மதாவிற்கு வாழ்த்துக்கள். விக்ரம் சுகுமாரனிடம் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டராக பணி செய்வது மிகக் கடினம். இருவருக்கும் மிகப் பெரிய வாழ்த்துகள். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். படம் பார்த்த பிறகு உங்களுக்கு தெரியும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல கஷ்டங்கள் உள்ளன. அங்கு தண்ணீர் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. அதற்கான காரணங்களையும் இந்த படத்தில் பேசியுள்ளனர்.
இந்த இயக்குநரை எனக்குப் பல வருடங்கள் முன்பே தெரியும். ஒரு படத்தின் வேலைக்காக மதுரைக்கு அருகில் ஒரு ஊருக்குச் சென்றேன். அப்போது ஒரு நாள் ஒருவர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் குடித்தேன். அது அவரது வீடுதான். பல நாட்கள் கழித்து அதை என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷாந்தனு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும். தயாரிப்பாளர் கண்ணன் சாருக்கு என் மனமார்ந்த நன்றி, இந்த குழுவினர் உழைப்பை, மக்களிடம் நீங்கள்தான் எடுத்துச் செல்ல வேண்டும்..” என்றார்.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் பேசும்போது,

“மதயானைக் கூட்டம் திரைப்படம் ஒரு அற்புதமான படைப்பு , இயக்குநர் விக்ரம் சுகுமாரன் சாருடன் இணைந்து பணி செய்தது மிகவும் மகிழ்ச்சி. பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார்கள். ஷாந்தனு மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் வேலை செய்துள்ளார். கண்டிப்பாக அது அனைவரிடமும் போய்ச் சேரும். தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை கயல் ஆனந்தி பேசும்போது,

“3 வருட உழைப்பு. பல தடைகளையும் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, யாரும் விட்டுக் கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சார் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர். அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படம் ராமநாதபுர மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும்…” என்றார்.

நடிகர் ஷாந்தனு பேசும்போது,

“இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப் பெரும் நன்றி.
இந்தப் படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்பு பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது. தயாரிப்பு மிகக் கடினமான வேலை மிகவும் சிரமப்பட்டேன், படக் குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது. அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப் பெரிய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நான்கு வருடங்களில் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. காலில் இரத்தம் வரும் அளவுக்கு நடித்தேன். எந்த படத்திலும் நான் இதைச் செய்ததில்லை. நான் மட்டும் இல்லை. அனைவரும் இது போல கஷ்டப்பட்டுத்தான் நடித்தனர். இந்தப் படத்தில் தென் மாவட்டங்களில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். இது ஒரு தரமான படைப்பாக இருக்கும்…” என்றார்.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் பேசும்போது,

“இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது நான் யாரிடமும் சிரித்துக்கூட பேசவில்லை. அது எனக்குக் கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கிறது. இருந்தும் யாரும் என்னை விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள். அனைவருக்கும் நன்றி.இளவரசு அண்ணனை 15 வருடங்களுக்கு முன்னதாகவே என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து விட்டேன். இந்தப் படத்தில் அவரை நடிக்க வைத்தது எனக்கு மிகப் பெருமையான விஷயம். நான் ஒரு பிடிவாதமான இயக்குநர். யாரிடமும் இரக்கம் காட்டவில்லை. அதற்காக நன்றியும், மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இனிமேலும் அப்படித்தான் இருப்பேன். அதுதான் என் பாவனை. எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு அது. படக் குழுவினர் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.இந்தப் படம் மிகப் பெரிய நெருக்கடியில்தான் உருவானது. அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி,. இந்தப் படத்தில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார் நடிகர் ஷாந்தனு. மிகப் பெரும் பாரத்தைத் தலையில் ஏற்றிக் கொண்டார். அவருக்கு இந்தப் படம் பெயர் சொல்லும் படைப்பாக இருக்கும். கண்டிப்பாக இது மிகப் பெரிய வெற்றியாக அமையும். பத்திரிக்கையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.
“இராவண கோட்டம்” திரைப்படம் வரும் மே 12-ம் தேதியன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *