• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கேரள வாலிபரை மீட்க ரூ.75 லட்சம் செலவா..?

Byகாயத்ரி

Feb 14, 2022

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த செரடு பகுதியை சேர்ந்தவர் பாபு (23 ). மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட பாபு, கடந்த 7ஆம் தேதி தனது நண்பர்களுடன் மலம்புழா பகுதியில் உள்ள மலைக்கு சென்றார். அங்கு மலை ஏறும்போது, கால் தவறி கீழே விழுந்தார். எனினும் நல்வாய்ப்பாக செங்குத்தான பாறை ஒன்றின் இடையே சிக்கி கொண்டார்.

அங்கிருந்தபடி தன்னை மீட்கும்படி வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்பினார். அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பாபுவை மீட்க முயன்றனர்.இது தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் தீயணைப்பு வீரர்களின் முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேரள மாநில பேரிடர் மீட்பு துறையின் மூலம் ராணுவத்தின் உதவி கோரப்பட்டது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு படை, விமானப்படை மற்றும் ராணுவத்தின் மீட்பு குழுவினர் மலம்புழா பகுதிக்கு வந்தனர்.அவர்கள் ஹெலிகாப்டரில் சென்று பாறையில் சிக்கி இருந்த பாபுவை கயிறுகட்டி இறங்கி பத்திரமாக மீட்டனர். 7ஆம் தேதி மாலையில் பாறை இடுக்கில் மாட்டிக்கொண்ட பாபு, சுமார் 45 மணி நேரத்திற்கு பிறகு 9ஆம் தேதி காலையில் மீட்கப்பட்டார்.

பாபுவை மீட்கும் பணிக்கு கேரள அரசு சுமார் ரூ. 75 லட்சம் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாபு பாறை இடுக்கில் சிக்கி கொண்டதுமே, அவர் சிக்கி இருக்கும் பகுதியை கண்டுபிடிக்க டிரோன்கள் பயன்படுத்தப்பட்டது.பின்னர் கடற்படையின் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது. அவர்கள் பாபு இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததும், அந்த தகவல் ராணுவத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் தனி ஹெலிகாப்டரில் அங்கு வந்தனர். அவர்கள் தான் பாபு இருக்கும் இடத்தின் அருகே ஹெலிகாப்டரில் சென்று அங்கிருந்து கயிறு கட்டி பாறை இடுக்குக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த பாபுவை கயிற்றில் கட்டி, கீழே அழைத்து வந்தனர்.இதற்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணி நேர வாடகை மட்டும் ரூ.2 லட்சம் ஆகும். அதன்படி 7ஆம் தேதி மாலை முதல் 9ஆம் தேதி காலை வரையிலான வாடகை மட்டும் ரூ. 50 லட்சம் ஆகியுள்ளது.

இதுதவிர பணிக்குழுக்களுக்கு செலவான தொகை ரூ.15 லட்சம். இன்னும் சில செலவுகளுக்கான கணக்கு கேரள கருவூலகத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. அதனையும் சேர்த்தால் மொத்த செலவு ரூ.75 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.