கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், நஞ்சுண்டாபுரம், பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை விளைவித்து வருகிறது.

இந்நிலையில் கணுவாய்- பாப்பநாயக்கன்பாளையம் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வரும் நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பாப்பநாயக்கன்பாளையம் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி உள்ளது.

அப்பொழுது அப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைக்குள் புகுந்த யானை பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. யானை வருவதை தெரிந்து கொண்ட அங்கேயே தங்கியிருக்கும் ஊழியர்கள் கடைக்குள் பதுங்கி இருந்து உயிர் தப்பினர். அதில் ஒரு ஊழியர் மேசைக்கு அடியில் பதுங்கி உயிர் தப்பியுள்ளார். தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில் இனி அடிக்கடி வனவிலங்குகள் நீர் தேடி ஊருக்குள் வரும் என்பதால் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிர படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



