நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி யில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர் பவனி இன்று நடைபெற்றது.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் வைக்கப்பட்ட மாதா சுருபத்தை புதுவை – கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் புனிதம் செய்து வைத்தார் அதனை தொடர்ந்து மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார், சூசையப்பர், உத்திரிய மாதா, 6 தேர்களில் முன்னே செல்ல நூற்றுக்கணக்கான பெண்பக்தர்கள் ஆரோக்கிய மாதா எழுந்தருளிய பெரிய தேரினை தோள்களில் சுமந்து செல்கின்றனர்
பேராலய முகப்பில் இருந்து தொடங்கிய பெரிய தேர்பவனி கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு, உத்திரியமாதாதெரு, கடைவீதி வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடையும். செல்லும் வழிகளில் பக்தர்கள் மலர்களை தூவி மரியே வாழ்க என பக்தி கோஷங்களை எழுப்பினர்.

தேர் பவனியை காண பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர் முன்னதாக பேராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாளை காலை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது. இதில் நாகை மாவட்ட காவல் செல்வகுமார் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
மாதா பிறந்தநாளான நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.