விக்கிரமங்கலம் அருகே பெண் பால்வியாபாரி வீட்டின் முன்பு இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்ததால், அப்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பாக மரணம் அடைந்த நிலையில் கீழப்பட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனங்கள் இரண்டினை தீ வைத்து எரித்தனர். தீ மளமளவென எரிந்து ஸ்கூட்டர்கள் முழுவதும் எரிந்து விட்டது. மேலும் சுவரில் மாட்டியிருந்த டைல்ஸ் கற்கள் பெயர்ந்து விழுந்தன. தீ பிடிப்பதைக் கண்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் சொல்லி தீயை அணைத்தனர் பின்பு சிறிது காயங்களுடன் சுமதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை செய்து தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்..