• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்-கனிமொழி பரபரப்பு பேச்சு!

தூத்துக்குடி (முத்துப்பாண்டியன்) மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக வரவேற்றுள்ளது.

மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு, இதுகுறித்து இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை அரசியலமைப்புக்கு எதிரானது என கூறி நிராகரித்துள்ளது. மேலும், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும், எந்த பதிலும் அளிக்காமலும் ஆளுநர்கள் கிடப்பில் போட அதிகாரம் இல்லை.

மாநில அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், நிராகரித்தல் அல்லது ஜனாதிபதிக்கு அனுப்புதல் ஆகிய மூன்று விருப்பங்களில் ஒன்றை மட்டுமே ஆளுநர் தேர்ந்தெடுக்க விருப்புரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை திமுக வரவேற்றுள்ளது. இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது: “உலகத்தில் கஷ்டமில்லாத தொழில் எது?” என்று கேட்டபோது, “ஆளுநர் வேலை பார்ப்பது” என்று தலைவர் கலைஞர் அவர்கள் பதிலளித்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு, தனது மக்களுக்கான உரிமைகளைக் காத்திடவும், மாநில நலன்களைப் பாதுகாக்கவும் சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் மசோதாக்களை, காலம் தாழ்த்தாமல் முத்திரையிட்டு டெல்லிக்கு அனுப்புவது என்னும் எளிய பணியை மட்டுமே ஆளுநருக்கு அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது. இன்று உச்சநீதிமன்றமும் அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இனி ஏனும் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, ஆளுநர் அவர்கள் அப்பணியை செவ்வனே செய்வார் என்று நம்புகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேபோல், திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில்: “மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அரசியல் அமைப்புக்கு எதிராக ஏதேனும் முரண்பாடுகள் தெரிந்தால், ஆளுநர் விளக்கம் கேட்கலாம். அதே நேரத்தில் மசோதாக்களை நிராகரிக்க முடியாது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று அவர் கூற முடியாது; அதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. எம்.பி., எம்.எல்.ஏக்களால் ஜனாதிபதி தேர்வு செய்யப்படுகிறார்; துணை ஜனாதிபதி எம்.பிக்களால் தேர்வு செய்யப்படுகிறார்; பிரதமரும் தேர்வு செய்யப்படுகிறார். ஆனால், ஆளுநர் நியமனம் செய்யப்படுகிறார்” என்று கூறினார்.”