மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா, திமுக சார்பில்11 வார்டு நகர் மன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் இவரை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு பல்வேறு காரணங்களை கூறி தகுதி நீக்கம் செய்த உத்தரவிட்டது.

சகுந்தலா சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய சூழலில், தமிழ்நாடு அரசின் தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்து கடந்த மாதம் 26 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற ஆணையை நகராட்சி ஆணையாளர் இளவரசனிடம் வழங்கி கடந்த 4 ஆம் தேதி மீண்டும் நகர் மன்ற தலைவராக பதவியேற்க வந்த சகுந்தலாவை பதவியேற்க அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது., இதனால் நகர் மன்ற தலைவர் அறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சகுந்தலாவிடம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதன் பின் அனுமதி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கடந்த 8 ந்தேதி மீண்டும் பதவியேற்க நகராட்சிக்கு வந்த சகுந்தலா மற்றும் அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள், பதவியேற்க அனுமதி கோரிய சூழலில், நகராட்சி ஆணையாளர் இளவரசன் மேலிட உத்தரவு இன்னும் வரவில்லை வந்த பின் தான் அனுமதி அளிக்க முடியும் என கூறிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
இதனால் விரக்தியடைந்த சகுந்தலா, எப்போது பதிவியேற்பது என்றும் நீதிமன்ற உத்தரவை மதிக்காத நகராட்சி நிர்வாகத்தை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினராகவும் சேர்மனாகவும் பதவி நீடிக்கலாம் என உத்தரவிட்ட சூழலில் இன்று அதிமுக நகர மன்ற உறுப்பினர்களுடன் உசிலம்பட்டி நகர்மன்ற சேர்மனாக சகுந்தலா பதவி ஏற்றுக்கொண்டார்.
இதற்கு அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதற்கு முன்னதாக நகராட்சி அலுவலகம் முன்பு உள்ள முத்துமாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பின்பு தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
மேலும் மக்கள் பணி செய்வதாகவும் நீதி வென்றது எனவும் தர்மம் வெற்றி பெற்றது எனவும் இதன் மூலம் மக்கள் பணி தொடர்ந்து செய்யப்போவதாக தெரிவித்தார்.
இதில் அதிமுக நகரச் செயலாளரும் நகர் மன்ற உறுப்பினருமான பூமாராஜா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரை தனராஜ், அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், பிரகதீஸ்வரன், காலா, பொன்பாண்டியம்மாள், தேவசேனா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.