2036ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பூண்டுள்ளதாகவும், மது உள்ளிட்ட போதை பொருள்கள் ஒழிப்பு மிகப்பெரிய சவாலாக மாறி உள்ள நிலையில் அவற்றை ஒழித்தால் மட்டுமே நாடு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியும் எனவும் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் மான்சுக் மண்டோவியா தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா யோக மையம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமோத்சவம் என்ற பெயரில் 17ஆவது ஆண்டாக கிராமங்கள் தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. த்ரோபால், வாலிபால் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பிரிக்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் த்ரோபால் மற்றும் வாலிபால் விளையாட்டுகளின் இறுதி போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அங்கு திரண்ட நிலையில் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் ஏசா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்த ஒயிலாட்டம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து விழாவில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மான்சுக் மண்டோவியா, முன்னாள் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், செஸ் வீராங்கனை வைஷாலி, பாராலிம்பிக் வீராங்கனை பவினா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடன் இணைந்து போட்டிகளை கண்டு களித்ததுடன் அவ்வப்போது வீரர் வீராங்கணைகளுக்கு உற்சாக மூட்டினர்.

பின்னர் பெண்கள் த்ரோபால் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கோவை தேவராயபுரம் அணிக்கு மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் கோப்பையும் முதலிடம் பிடித்த பெங்களூரு புறநகர் அணிக்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. இதே போல் ஆடவர் வாலிபால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற சேலம் உத்தமசோழபுரம் அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த பெங்களூர் புறநகர் அணிக்கும் கோப்பைகளும் பரிடு தொகைக்கான காசோலையும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக விழாவில் பேசிய மத்திய அமைச்சர் மான்சுக் மண்டோவியா, நாட்டில் விளையாட்டு துறையில் திறமையானவர்கள் நகரங்களில் பண்படுத்தப்பட்ட போதும், கிராமங்களில் இருந்து அவர்கள் கண்டறியப்படுவதாக தெரிவித்தார். எனவே திறமையானவர்களை கிராமப்புறங்களில் இருந்து கண்டறிவது மிக அவசியம் என தெரிவித்த அவர், இந்தியாவில் வருகிற 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த பிரதமர் நரேந்திர மோடி உறுதி கொண்டுள்ளதாகவும், மது உள்ளிட்ட போதைப்பொருள் ஒழிப்பு மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில், அதனை ஒழித்தால் மட்டுமே நாடு முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், கிராமப்புறங்களில் உள்ள திறமையான வீரர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயார்படுத்த வேண்டும் எனவும், நாட்டில் உள்ள கிராமங்களில் விளையாட்டுத் துறைக்கான உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுவதற்கான அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னுடைய கணவர் ஏற்கனவே பயிற்சியாளராக இருக்கும் நிலையில் தானும் பயிற்சியாளராக வேண்டிய அவசியம் இல்லை எனவும், திறமையானவர்களை கண்டறிவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்
இதை தொடர்ந்து பேசிய செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவில் 140 கோடி மக்கள் இருக்கும் நிலையில் ஒரு சிலர் மட்டுமே செஸ் விளையாட்டில் முதலிடம் பெறுவது என்பதை விட இன்னும் அதிகப்படியான நபர்கள் வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்றார்.

பின்னர் பேசிய ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தற்போதைக்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த கிராமோத்சவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருப்பதாகவும், இதில் பலர் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு விளையாட்டு துறையில் இணைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் அரசுகள் மட்டுமே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நிலை மாறி, மக்களும் விளையாட்டு துறையின் மீது ஆர்வம் கொள்ள வேண்டும் எனவும் வருகிற 2047 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்களில் ஏழு லட்சத்திற்கும் அதிகமாக உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களை இந்த கிராமோத்சவம் நிகழ்ச்சியில் பங்கேற்க செய்வதே இலக்கு என்றார். போதை பழக்கத்திலிருந்து இளைஞர்கள் வெளியேற அவர்களை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.