• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு திமுக வைத்த செக்..

Byகாயத்ரி

Jul 25, 2022

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதையடுத்து விரைவில் வழக்கு விசாரணக்கு வரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தில் சுமார் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றாகவும், இதுகுறித்து 2018ம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்தார். குறிப்பாக, ஒட்டன்சத்திரம் – தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலைக்கான திட்ட மதிப்பீடு என்பது 713.34 கோடியாக உள்ள நிலையில் அந்த திட்டத்திற்கான நிதி 1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த பணிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் எடப்பாடி கே.பழனிசாமி உறவினர் ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி – செங்கோட்டை கொல்லம் நான்கு வழிச்சாலையை விரிவுபடுத்தி, பலப்படுத்த 720 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் “வெங்கடாஜலபதி அன்ட் கோ” என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதே போல மதுரை ரிங் ரோடு ஒப்பந்தம், வண்டலூர் முதல் வாலாஜா வரையுள்ள நான்கு வழிச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்ற ஒப்பந்தம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி , பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் கோட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத்துறை சாலைகள் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளை 5 ஆண்டுகளுக்கு மேற்கொள்ள 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் என பல நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியுள்ளார் என ஆர்.எஸ் பாரதி மனுவில் தெரிவித்து இருந்தார். இந்த வழக்கில் கடந்த 2018 அக்டோபர் 9ம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எடப்பாடி பழனிசாமி மீதான புகார் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டில் இவ்வழக்கில் விசாரனை நடத்திய உச்சநீதிமன்றம், பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க இடைக்கால தடைவிதித்தது. இதன் பின்னர் இவ்வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது இந்நிலையில் இந்த வழக்கை விரைவாக விசாரித்து கொள்ளுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது. அதற்கு தலைமை நீதிபதி, வழக்கு விசாரணைக்கு விரைவில் பட்டியலிடப்படும் என தெரிவித்தார், அதேவேளையில் விசாரணை தொடர்பான தேதி எதுவும் குறிப்பிட்டு கூற முடியாது எனவும் தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.