கோவை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று (ஜூன் 2) பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மீண்டும் கல்வி பயணத்தை தொடங்கினர்.
பள்ளிகள் திறக்கும் நாளை முன்னிட்டு, பல்வேறு பள்ளிகளில் சிறப்பு அலங்காரங்கள், வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மாணவர்களை மகிழ்வுடன் வரவேற்கும் சூழல் பல பள்ளிகளில் உருவாக்கப்பட்டது. சில பள்ளிகளில், மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற காட்சிகள் காணப்பட்டன.

கடந்த ஏப்ரல் 25 ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டு இருந்த நிலையில், மாணவர்கள் தங்கள் குடும்பங்களுடன் சுற்றுலா மற்றும் உறவினர் வீடுகளுக்கு சென்று நேரத்தை மகிழ்ச்சியாகக் கழித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களின் முகங்களில் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது.
கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகளவில் வருகை தந்தனர். பள்ளி வளாகங்களில் குலுங்கும் சிரிப்பும், பழைய நண்பர்களை மீண்டும் சந்திக்கும் ஆவலும் இன்று பார்வையிடக் கிடைத்தது. பள்ளிக் கல்வி தொடங்கி உள்ள நிலையில், மாணவர்களின் ஆர்வமும், புதிய கல்வியாண்டுக்கான தயார் நிலையில் பள்ளிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.