ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022ல் தொடங்கி ஓராண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படையினரின் தாக்குதலை, அமெரிக்க மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குப்பிடித்து வருகிறது உக்ரைன். இருந்தபோதிலும், இந்தப் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்வது இரு நாடுகளை மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கங்கள் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து வீடியோ மூலம் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். போரை தற்போதைய அமெரிக்க அரசு ஒழுங்காக கையாளவில்லை எனக் கூறிய டொனால்டு ட்ரம்ப்,
“நான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே இதுபோன்ற போர் ஏற்பட்டிருக்காது. நான் அதிபராக இருந்திருந்தால் புதின் போரை தொடங்கியிருக்க மாட்டார். லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற போரை நடத்த விட்டிருக்கமாட்டேன். போர் சூழல் ஏற்பட்டது தெரிந்திருந்தால், நான் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணிநேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன். இப்போது அமெரிக்கா டாங்கிகளை கொடுக்கிறது. அடுத்து என்ன அணு ஆயுதங்களை தரப்போகிறதோ? இந்த முட்டாள்தனமான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதை செய்து காட்ட முடியும்” என அமெரிக்காவின் ஜோ பைடன் அரசை சாடியுள்ளார்.