கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டத்தில் தொண்டாமுத்தூர் காவல்நிலைய எல்லையில், இன்று 25.10.23 தேதி காலை 06.00 மணிக்கு, கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் தொண்டாமுத்தூர் காவல் ஆய்வாளர் திரு. லெனின் அப்பாதுரை தலைமையில் தனிப்படையினர் தொண்டாமுத்தூர். நரசிபுரம் சாலை, குளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்து வந்தபோது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வடமாநில நபரான பெரிதுல் (33), s/o. அப்துல் கோத்தூஸ், நோகால் மாவட்டம், அசாம் மாநிலம், என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்ய, அவரிடம் 12 கிராம் எடையுள்ள ஐந்து பாக்கெட்டுகளில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், தற்போது தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் கடந்த 3 மாதங்களாக வசித்துக் கொண்டு, கட்டிட கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
அதேபோல் மேற்கொண்டு விசாரணை செய்ததில் கிடைத்த தகவலின் பேரில் தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் வசித்து வரும் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த குதர்ஷா கத்துல் (35), w/o. அலி ஹுசைன், நோகால் மாவட்டம், என்பவரின் வீட்டினை சோதனை செய்ததில் அவரது வீட்டில் இருந்து 12 கிராம் எடையுள்ள இரண்டு பாக்கெட்டுகளில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 25 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் மேற்படி நபர்கள் இந்த உயர்ரக போதைப் பொருளை அசாம் மாநிலத்தில் இருந்து ரயிலில் கொண்டு வந்து அந்த சுற்றுவட்டாரத்தில் வேலை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கு அதிக லாபத்தில் விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. மேற்படி நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டும், இருவரிடம் இருந்து சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள 85 கிராம் எடையுள்ள உயர்ரக போதைப் பொருள் பறிமுதல் செய்யபட்டும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.