மதுரையில் 150 அடி உயரமுள்ள வ. உ. சிதம்பரனாரின் முழு திருவுருவ சிலை கப்பலூரில் 2.5 ஏக்கரில் அமையவுள்ளது. இதற்காக தனியார் கல்லூரி இடம் கொடுத்துள்ளது.

சிலை அமைவிடத்தில் நூலகம், பூங்கா உள்ளிட்டவை அமையவுள்ளது. சிலையின் முகத்தை பார்க்கும் வண்ணம் 2 லிப்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இரண்டரை ஏக்கர் நிலத்தை கப்பலூர் பிடிஆர் கல்லூரி நிர்வாகம் அளித்துள்ளது. 15 மாதத்தில் சிலை அமைக்கப்பட்டு பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிலை அமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை வண்டியூர் அம்மா திடலில் நடைபெற்றது.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர்கள் சுந்தர் சி, விஜயகுமார், செங்கோல் ஆதினம் கலந்து கொண்டனர்.

விழாவில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் வஉசிக்கு சிலை அமைக்க வேண்டும் என இந்திய துணை குடியரசுத்தலைவர் முன் தீர்மானங்கள் நிறைவேற்றி ஏசிஎஸ் அறக்கட்டளையால் கோரிக்கை வைக்கப்பட்டது.தொடர்ந்து சென்னை பெரம்பூர் கந்தன் தெருவில் உள்ள வஉசி வாழ்ந்த வீட்டை தமிழக அரசு வாங்கி நினைவாலயம் அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
விழாவில் வந்தே மாதரம் பாடல், தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு விழா தொடங்கப்பட்டு வந்தே மாதரம், தேசியகீதம் பாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
தொடர்ந்து புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேசுகையில்”
ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பில் 140 அடியில் சிலை அமைக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் 150 அடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாவின் இதயத்தில் எம்ஜிஆர் இருந்ததை போல பிரதமர் இதயத்தில் சி.பி.இராதாகிருஷ்ணன் இருக்கிறார்.
தமிழனுக்கு உயரிய இடம் கொடுக்க வேண்டும் என்பதற்காக துணை குடியரசுத்தலைவர் பதவியை சிபிஆருக்கு பிரதமர் கொடுத்துள்ளார் என புகழாரம் தெரிவித்தார்.
தொடர்ந்து செங்கோல் ஆதினம் பேசுகையில்,

செங்கோல் என்பது மன்னராட்சி என வரலாறு தெரியாமல் பேசினார்கள். செங்கோல் என்பது நீதியின் ஆட்சி. செங்கோல் வழுவாமல் ஆட்சி செய்த பாண்டிய மன்னன் நீதிக்காக உயிர் துறந்தான். பிரதமர் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோலை வைத்து தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமையையும் கெளரவத்தையும் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி பேசுகையில்,
நானும் கோயம்புத்தூரை சேர்ந்தவன். சிபிஆர் தமிழகத்திற்கு மட்டுமல்ல கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளார். எல்லோரும் கூறியது போல சி.பி. இராதாகிருஷ்ணன் குடியரசுத்தலைவராக உயர்வார். என் இன்ஷியல் சி அந்த சி என்பது சிதம்பரம் பிள்ளை என என் அப்பாவை குறிக்கும். நமது சுதந்திரம் பல தியாகிகளின் தியாகத்தால் கிடைத்தது.
இந்த தியாகம் இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியவில்லை.
வரலாறு படைக்க வேண்டுமென்றால் வரலாற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை. தான் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாயையும் நாட்டுக்காக செலவு செய்து கப்பல் ஓட்டியவர். இந்த சிலையை பார்த்த பிறகு ஒவ்வொருக்கும் வஉசி பற்றிய வரலாறு தெரிய வேண்டும். நமது சமுதாயத்திற்கு என்ன பலம் இல்லை. நாம் ஒன்றுபட்டால் முடியாதது எதுவும் இல்லை என பேசினார்.
தொடர்ந்து விழாவில் நடிகர் விஜயகுமார் பேசுகையில்,
நமது முன்னோர்களை நாம் மறக்கக்கூடாது. பல பேர் தியாகம் செய்தாலும் அதில் குறிப்பிடத்தக்கவர் வஉசி. கலைத்துறைக்கு வந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. எல்லா மொழிகளிலும் நடித்துவிட்டேன். எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பதை விட என்னென்ன செய்தான் என்பதே முக்கியம். குஜராத்தில் பிரதமர் மோடி வல்லபாய் படேல் சிலையை அமைத்தாரோ அதுபோல ஏ.சி.சண்முகம் 150 அடியில் சிலையை அமைக்கிறார்.
மதுரைக்கு பெருமை தேடித்தரும் வகையில் சிலை அமைய உள்ளது.
நாட்டாமை பட வசனத்தை மேடையில் கூறிய நடிகர் விஜயகுமார், அண்ணனா இருந்தாலும், தம்பியா இருந்தாலும், யாரா இருந்தாலும் நீதிடா நியாயம்டா நேர்மைடா என்ற வசனத்திற்கு ஏற்புடையவர் சி.பி.இராதாகிருஷ்ணன். படிப்படியாக உயர்ந்து ஆளுநராகி, குடியரசு துணைத்தலைவராகி அழகு பார்த்துள்ளார் பிரதமர். மனதில் பட்டதை நல்லதை செய்யக்கூடியவர் பிரதமர் என பேசினார்.
தொடர்ந்து விழாவில் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,

சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமே வஉசி தான். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பாடலுக்கு ஏற்றபடி மூன்றெழுத்துக்கு சொந்தமானவர் ஏசிஎஸ். நமது உறவுக்காரர் நமது சொந்தக்காரர் நமது தமிழ்நாட்டை சேர்ந்தவர் இந்திய குடியரசுத்துணைத்தலைவராக வர காரணம் பிரதமர். தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி.இல்லை. இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதவர் பிரதமர்.
இருப்பினும் தமிழரான எல்.முருகனை மத்திய அமைச்சராக்கி, தமிழிசையை ஆளுநராக்கி அழகு பார்த்தவர் பிரதமர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தொழில்துறை அமைச்சராக நான் இருந்தேன். தூத்துக்குடியில் 21 ஆண்டுகளுக்கு முன் வஉசிக்கு சிலை அமைக்க கோரினேன். ஜெயலலிதாவும் ஹெலிகாப்டரில் வந்தார். சிலை திறந்தார். அந்த செயலில் சிறு பங்கு எனக்கும் உண்டு, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியவர் மோடி. ஆனால் தமிழகத்தில் இந்த இட ஒதுக்கீடு கிடைக்காமல் செய்து விட்டனர். வழக்கு தொடருகிறார்கள். பொது இடத்தில் இதற்கு மேல் இதுகுறித்து பேச விரும்பவில்லை என பேசினார்.
தொடர்ந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில்,
வஉசியின் சுதேசி கனவை அதன் நோக்கத்தை 100 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்ம நிர்நார் மூலம் வஉசியின் எண்ணத்தை கனவை நிறைவேற்றி வருபவர் மோடி. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் நமது பொருட்களை தேடி உலக நாடுகள் பெருமளவில் வருகின்றன. தொடர்ந்து வஉசியின் சுதேசி எண்ணத்தை கனவை நிறைவேற்றுபவர் மோடி என பேசினார்.
தொடர்ந்து விழாவில் துணை குடியரசு தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் பேசுகையில்,
புனித பாரத அன்னை பொற்பாதங்களை வணங்குகிறேன்.
வஉசி ஒரு மகத்தான தலைவர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேசத்திற்காக வாழ்ந்து மறைந்த தலைவர் வஉசி. நாம் சுகந்திர காற்றை சுவாசிக்க முதல் விதை முழு விதையை விதைத்தவர் வஉசி. நான் இந்த விழாவிற்கு வராமல் இருக்க முடியுமா. உடனே வருகிறேன் என கூறினேன். CPR வீட்டிற்கு அருகே இருந்தேன் என ACS சொல்வார். ஆனால் அது உண்மையல்ல. அவர் வீட்டருகே நான் வாடகை வீட்டில் இருந்தேன் என்பது தான் உண்மை.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் குடியரசு தலைவர் உரையாற்றினார்கள் அது இந்தியில் அமைந்தது. அதில் சில பகுதிகளை ஆங்கிலத்தில் இருப்பதை பேசுவது முறை. இந்த முறை அந்த வாய்ப்பில் நீதிவழுவா சொங்கோலின் கொற்றம் வாழ்க என கூறினேன். எதுவும் மனம்போல் அமையும் என்பதில் நம்பிக்கை. சிதம்பரம் பிள்ளையின் மகன் தான் அடிக்கல் நாட்டும் மேடையில் இருக்க வேண்டும் என்பது இன்று தான் எனக்கு தெரியும். சுந்தர் சியை பற்றி பேசிய ராதாகிருஷ்ணன்.
வஉசி சிறைச்சாலையில் இருந்த போது யாருக்கும் தரப்படாத கொடிய சிறை அவருக்கு கொடுக்கப்பட்டது. வஉசி 2 தண்டனைகளும் நிறைவேறி வெறியே வந்த போது அவரை வரவேற்க 2 பேர் தான் நின்றிருந்தனர். வஉசி வெளியே வந்த போது அவரை அடையாளம் தெரியவில்லை. வந்த இருவரில் ஒருவர் சுப்ரமணியசிவா.கொடிய வறுமையை வஉசிக்கு பரிசாக கொடுத்தது வெள்ளை அரசாங்கம். எத்தனை கொடுமைகளையெல்லாம் செய்தது ஆங்கிலேய அரசு.
தர்மத்தை வீழ்த்தும் சக்தி உலகில் எங்கும் இல்லை. தர்மம் வென்றே தீரும். உண்மை வென்றே தீரும்.வஉசியின் சுதந்திரகனல் என்றென்றும் போற்றப்படும். செக்கிழுத்த செம்மல் என போற்றப்படும் வஉசி என்பதை தெரிந்துகொள்ள கோவை சிறைக்கு ஒருமுறையாவது சென்று அந்த கல் செக்கை பார்க்க வேண்டும். அவர் தியாகத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மாடு இழுக்கும் செக்கை மனிதராக கைகளால் இழுத்தவர் வஉசி.
வஉசி வாழ்கையில் வறுமையின் கோரப்பிடியில் இருந்த போது சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வஉசிக்கு 5 ஆயிரம் ரூபாய் இலவசமாக கொடுத்துள்ளார். அந்தக் காலத்தில் 5 ஆயிரம் ரூபாய் என்பது பெரிய மதிப்பு. அப்போதைய காலத்தில் 5 ஆயிரம் ரூபாய் வேண்டாம் என கூறியவர் வ.உ.சி.இன்றைக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு எதற்கும் தயாராக இருக்கும் மனிதர்கள் வாழும் இந்த காலகட்டத்தில் அப்போதைய காலகட்டத்திலயே 5 ஆயிரம் ரூபாய் வேண்டாம் என கூறியவர் வ.உ.சி
தேசியம் என்றும் தமிழ் மண்ணில் வீழாது. வந்தே மாதரம் என முழங்க ஒருபோதும் தயங்காதவர் வஉசி.
அவர் காலத்தில் வாழாவிட்டாலும் அவரது சிலையை வணங்கும் பெயர் பெற்றுள்ளோம் என்பதே பெருமை. தர்மத்தை வீழ்த்துகின்ற சக்தி உலகில் எதுவும் இல்லை. கார்சூழும் மேகங்கள் கதிரவனை ஒருபோதும் மறைத்ததில்லை. கதிரவன் எழும்போது கார்மேகங்கள் கலைந்து ஓடிவிடும்.
வஉசி விதைத்த தேசிய விதை ஓங்கி வளரப்போகிறது. வஉசிக்கு இப்போது இதை செய்யாவிட்டால் வரும் தலைமுறை நம்மை மன்னிக்காது. யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் வஉசி விதைத்த தேசிய விதை ஆழ் போல் தழைத்து மேலோங்கும். வஉசி சிலை அமைந்த உடன் அதனை திறப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்த மதுரை மண்ணிற்கு வருவார்கள். என்பதை உறுதி கூறிக்கொள்கிறேன் என பேசினார்.






