கோவை பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் கடந்த டிசம்பர் 12 ல் நடந்த இந்த மாநாட்டில், 16 வகையான தொழில் பிரிவுகளை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் பங்கேற்று பேசினர். சவால்களுக்கு இடையே உள்ள வாய்ப்புகள் குறித்து பேசினர்.
நிலா அட்வைஸர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சவுமியா கேசவா நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். கோவை பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகர் வரவேற்றார். நிகழ்ச்சியின் தலைவர் பூனம் பப்னா நிகழ்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கினார். பி.எஸ்.ஜி., கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.பிருந்தா தலைமை உரையாற்றினார்.
கோவை பிக்கி புளோ அமைப்பின் தலைவர் ரமா ராஜசேகர் பேசுகையில், “தொழில் முனைவோராக முயற்சிக்கும் மாணவ, மாணவியருக்கு இது போன்ற மாநாடுகள், கருத்தரங்குகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கோவையின் மகளிர் பிரிவு, பி.எஸ்.ஜி.கல்லூரியுடன் இணைந்து இது போன்ற நிகழ்வுகளை நடத்துவது தொழில் மேம்பாட்டிற்கு உதவும்,” என்றார்.
பி.எஸ்.ஜி.,கல்லூரி முதல்வர் டாக்டர் டி.பிருந்தா பேசுகையில், “சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கடந்த 5 ஆண்டுகளில் தொழில் முனைப்பில் மகளிர் பங்களிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டில் 1.5 கோடி பெண்கள் தொழில் செய்து வருகின்றனர். 2.2 கோடி முதல் 2.7 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை அளித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் மகளிர் தொழில் முனைவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.
பிளாட்டோ காலணி நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரவி கல்லாயில், கேப்டஸ்ட் அன்ட் சியோ பிலிப் இணை நிறுவனர் யமுனா சாஸ்திரி, டிபிஆர் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி ஆர்த்தி குப்தா உள்ளிட்டோர் நிஜவாழ்க்கையில் அனுபவங்களை பகிர்ந்து தொழில் முனைவோருக்கான ஆலோசனைகளை வழங்கினர்.