மதுரை ரோட்டரி மிட் டவுண் அமைப்பால் மதுரையின் வரலாறும் பண்பாடும்” என்னும் தலைப்பில் மதுரை மாவட்டத்தின் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விமானம் மூலம் தலைநகர் செல்லவும், மாருதி தொழிற்சாலை பார்வையிடுவதற்குமான வாய்ப்பு தரப்பட்டது.பறப்போம் தலைநகருக்கு என்னும் தலைப்பில் மதுரை ரோட்டரி மிட் டவுண் அமைப்பால் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு 14.5.2025 முதல் 16.5.2025 வரை திட்டமிடப்பட்டிருந்த நிகழ்வு அநேகமாக முதல் முறை தமிழ்நாட்டின் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய வாய்ப்பாக கருதுகிறேன்.

நிகழ்வின் முதல் நாள் குடியரசுத்தலைவர் மாளிகையின் 37 -வது வாசலின் வழியே ஆரோக்கிய வனத்தின் ஊடே நடந்து சென்று குடியரசுத்தலைவர் மாளிகையின் நுழைவு வாயிலில் வியாட்னாம் அரசால் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்ட சிற்பமான சஹஸ்த்ரபாகு அவ்லோகிதேஸ்வரர் ‘உலகைக் கருணையுடன் பார்க்கும் இறைவன்’என்று பொருள்படும் அர்த்தத்தில் நிறுவப்பட்டிருந்த சிலையானது ஆட்சியாளர்கள் மக்களிடம் எவ்வளவு கருணையோடு அணுக வேண்டியதன் அவசியத்தை நிதம் தோறும் நினைவூட்டும் வகையில் நிறுவப்பட்டிருந்தது.
இந்தியா சுதந்திரம் பெற்று பதவியேற்பு விழாக்களும் , இந்நாட்களில் இராணுவ மற்றும் பிற துறைகளில் பங்களிப்பாற்றும் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் ஜெய்சல்மார் கற்களால் வடிவமைக்கப்பட்ட காணதந்திர மண்டபம் மற்றும் அசோக மண்டபங்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த பிரமாண்டங்களின் நடுவே ஆரவாரமே இல்லாமல் டெல்லியை வடிவமைத்த லட்யன் அவர்களின் சிலை முன்பு பெரும் நிறைவோடு அவர் வடிவமைத்த மாளிகையின் பிரமாண்டத்தின் முன் மாணவர்களோடு குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
இரண்டாவது நாள் டெல்லியிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் ஹரியானாவின் குருகிராமில் அமைந்துள்ள மாருதி சுசுகி இந்தியா நிறுவனைத்தை பார்வையிட பாதுகாப்பு உபகரணங்களோடு தொழிற்சாலையில் சுமார் 23 பணியிடங்களை கடந்து முழு சொகுசு கார்களாக ரோபோடிக் தொழில்நுட்ப உதவியோடு ‘zero defect’ என்றும் பொருண்மையில் பாதுகாப்பு அம்சங்களோடு வடிவமைக்கப்படும் கார்களை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.

இன்றைய தொழிற்புரட்சி 4.0 எதிர்பார்க்கும் தொழில் நுட்ப அம்சங்களை தொழில்நுட்பவியாளர்கள் ராஜூ மற்றும் ஷாலினி சிறப்பாக விளக்கி மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதலளித்தனர். மதியம் மாருதி நிறுவனத்தின் 15,000 பணியாளர்கள் உணவருந்தும் பிரமாண்ட கூடாரத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய அருங்காட்சியம் பார்வையிடப்பட்டது.
அன்று மாலை தலைநகர் டெல்லியில் செயல்படும் ரோட்டராக்ட் அமைப்பு மாணவர் குழுவை வரவேற்று நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டியது. இந்நிகழ்வில் டெல்லி மற்றும் மதுரை ரோட்டரி சங்கங்களால் சமூக அக்கறையோடு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.
பெரும் பொருட்செலவோடு அரசுக் கல்லூரி மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு நிச்சயம் மூன்றாமாண்டு இந்நிகழ்வு அம்மாணவர்களின் வாழ்வில் மாற்றங்களை அவர்கள் வாழ்வியல் திட்டமிடல்களில் நிகழ்த்தும் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறான தொழில் முறை பயணங்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே ஒரு பேராசிரியராக என் ஆவல்.
வாசிப்பும் பயணமும் தேடலும் எந்த ஒரு மனிதனின் வாழ்விலும் அசாத்திய மாற்றங்களை நிகழ்த்தும்.
இதில் தேர்வான 6 மாணவர்களும் கிராம்ப்புறங்களில் இருந்து உயர்கல்வியை நோக்கி வந்திருக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள்.
பின்னாளில் அவர்களின் இரண்டாவது விமானப்பயணம் அவர்களின் முதல் பயணப் பேரனுபவங்களை நிச்சயம் நினைவூட்டும்.
இந்த திட்டமிடலின் இயக்குனர்கள் மதுரை மிட் டவுண் ரோட்டரியன் ஜெயகோமதிநாயகம் ரோட்டரியன் மதன் கருப்பையா மற்றும் மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் குணசேகரன், அரசுக்கல்லூரி முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளராக என்னோடு பணியாற்றிய முனைவர் அனிதா அவர்களுக்கும் நன்றிகள். இந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நல்வாய்ப்பானது தமிழகத்தில் பயிலும் அனைத்து அரசுக் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவு செய்யப்பட வேண்டும் .