கோவை சிட்ரா பகுதியில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் சிகிச்சை மற்றும் ஓபிடி சிகிச்சைக்கான புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு மருத்துவமனையின் அதிநவீன வசதிகளை பார்வையிட்ட குடியரசுத் துணைத் தலைவர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிறுவனர் நல்லா.ஜி.பழனிச்சாமி, செயல் தலைவர் அருண் பழனிச்சாமி, சக்தி குழுமங்களின் தலைவர் மாணிக்கம் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் கேஎம்சிஎச் மருத்துவமனை நிறுவனர் நல்லா பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய குடியரசுத் துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார். மேலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு இணங்க இந்த தைத்திருநாளில் மருத்துவ உலகில் புதிய எழுச்சியாக இம்மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சைக்கான புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசியவர், மனிதன் வெற்றி பெற கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவசியம் எனக் கூறியவர், தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அந்த வகையில் வெற்றி பெற்றவர் எனவும், மற்றொருவராக நல்லா பழனிச்சாமி திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
நல்லா பழனிச்சாமி அவர்கள் சாதாரண கிராமத்தில் பிறந்து அமெரிக்காவில் மருத்துவ படிப்பு முடித்த பின்பு, 200 படுக்கை வசதியோடு துவங்கிய மருத்துவமனை இன்றைக்கு 2000 க்கும் மேற்பட்ட படுக்கைகளை கொண்டு சிறப்பாக இயங்கி வருவதாகவும், அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ உலகில் அறிமுகம் செய்யப்படும் நவீன தொழில்நுட்பங்கள் உடனடியாக கோவைக்கு இந்த மருத்துவமனை மூலம் கொண்டுவரப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைவருக்கும் அனைத்தும் என்கிற அடிப்படையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது ஒரே வருடத்தில் 11 மருத்துவமனைகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சிபி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.





