• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாசர் ஸார்தான் என்னுடைய திரையுலக குருநாதர் நடிகர் ஜீவா..!

சென்னை, லயோலா பொறியியல் கல்லூரியில் கலை விழா நடைபெற்றது. இந்தக் கலை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நாசரும், ஜீவாவும் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் நடிகர் ஜீவா பேசும்போது, “நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில்கூட இவ்வளவு கூட்டம் இல்லை.
லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதும் ஒரு மகிழ்ச்சியான தருணம்தான். பல ஜாம்பவான்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கிய கல்லூரி இது. சூர்யா சார், விஜய் சார், விஷால், உதயநிதி போன்று பலரை உருவாக்கிய இந்த கல்லூரியில் என்னை ஒரு விருந்தினராக அழைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
பல ஆண்டுகளுக்கு முன் எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அப்போது அது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.
நாசர் சாரை பார்த்தவுடன் நான் பேச வந்ததை மறந்துவிட்டேன். அவருடன் இணைந்து பணியாற்றியதற்கு பெருமைப்படுகிறேன். அவர்தான் எனக்கு வழிகாட்டி. குரு.. என்னுடைய முதல் படத்திலேயே எனக்கு மாமனாராக நடித்திருந்தார்.
அப்போது நான் ஒரு தயாரிப்பாளரின் மகனாகத்தான் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமானேன். அவர் என்னைப் பார்த்து “தயாரிப்பாளர் மகன் என்றால் நடிக்க வந்திருவியா..? ஏன் நடிக்க வந்த..?” என்றும் கேட்டார். அந்த எளிமையான கேள்விக்கு என்னிடம் இதுநாள்வரையிலும் பதில் இல்லை.
நீங்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி மற்றும் ஒரு குரு தேவை. அந்த வகையில் எனக்கு நிறைய குரு கிடைத்தார்கள். அந்த வகையில் என் முதல் குரு என்று சொன்னால் அது நாசர் சார்தான். இன்று இந்த மேடையை அவருடனும் பகிர்ந்து கொண்டிருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். நீங்கள் எனக்கு கற்பித்த அனைத்து சிறந்த பாடங்களுக்கும் நன்றி சார். இந்த இடத்தில் உங்களுக்கு நன்றி சொல்வது ஒரு சிறந்த வாய்ப்பாக எண்ணுகிறேன்.
நான் பொறியியல் கல்லூரி மாணவனாக ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘நண்பன்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.. என்ஜினியர், டாக்டராக நடிப்பதையெல்லாம் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.

ஆனால், நான்கு வருட அந்தப் படிப்பு அனுபவத்தைப் பெற்ற நீங்கள் என்னைவிட அதிர்ஷ்டசாலிகள். நீங்கள் செய்ய வேண்டிய பணிகள், தேர்வுகள் இன்னும் பல இருக்கின்றது. அதனைத் தவிர இங்கே நீங்கள் உருவாக்கும் நட்புகள் மற்றும் நினைவுகள் எப்போதும் மங்காது. உத்வேகத்துடன் இருங்கள். பலரை ஊக்குவியுங்கள். நன்றாக இருப்பீர்கள்.
நான் வாழ்க்கையில் பல மேற்கோள்களைப் படித்துள்ளேன். அவற்றில் எனக்குப் பிடித்த இரண்டினை இங்கே சொல்ல விரும்புகிறேன்..

“THERE IS NO COMPETITION, THAT IS VIEW AS A VIEW” இதுதான் நான் பின்பற்றும் மந்திரம். மற்றொன்று “USE YOUR ENERGY TO CREATE NOT TO DESTROY”. இறுதியாக “STOP TRYING TO BE LIKED BY EVERYBODY, EVEN YOU DONT LIKE EVERYBODY”.

உங்களிடம் பணம் இருக்கிறது. உங்களிடம் நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், நான் நினைக்கக் கூடிய மிகவும் மதிப்புமிக்க விஷயம் ஆற்றல். சிறந்த ஆற்றல் உள்ளவர் எதையும் சாதிக்க முடியும். என்னுடைய சிறந்த படங்கள் இன்னும் வரவிருக்கிறது. முந்தைய படங்களைவிட வரவிருக்கும் படங்களில் உங்களை மேலும் மகிழ்விக்கவுள்ளேன். அதற்கும் உங்களின் ஆதரவு தேவை…” என்றார்.