தேனி, திண்டுக்கல் ,மதுரை ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ளது முல்லைப் பெரியாறு அணை .கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் நான்காவது முறையாக 142 அடியை எட்டியுள்ளது.
152 அடி உயரம் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் நீரை முழு கொள்ளளவை தேக்க முடியாது என்று கேரள அரசு கூறியதால் தமிழக மற்றும் கேரள அரசுகளுக்கிடையே முல்லைப் பெரியாறு பிரச்சினை விசுவரூபம் எடுத்தது.
தமிழகத்தில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் முழு கொள்ளளவை சேர்க்க வேண்டும் என்று பல்வேறு கட்ட போராட்டங்களை கடந்த காலத்தில் மேற்கொண்டனர். இதனையடுத்து தமிழக அரசு சட்டப் போராட்டத்தை தொடங்கியது . உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதன் அடிப்படையில் கடந்த 2014 மே 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தேக்கி கொள்ளலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு பிறப்பித்தது. அதே வருடத்தில் நவம்பர் 26ஆம் தேதி அணையில் 142 அடி தேக்கபட்டது. அதன் பின் 2015ஆம் ஆண்டிலும், 2018 ஆம் ஆண்டிலும் 142 அடி தேக்கபட்டது .
அதன் பிறகு தற்போது நேற்று இரவு மூன்று மணியளவில் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனையடுத்து கேரளப் பகுதிக்கு தமிழக பொதுப்பணித் துறையினர் மூன்றாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர் .தற்போது தமிழக பகுதிக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ராட்சத குழாய்கள் வழியாக வினாடிக்கு 2300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது .அணைக்கு 2210 கன அடி நீர் வினாடிக்கு வந்து சேர்கிறது.