நற்றிணைப் பாடல் 101:
முற்றா மஞ்சட் பசும் புறம் கடுப்பச்
சுற்றிய பிணர சூழ் கழி இறவின்
கணம் கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி
புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும்
துறை நணி இருந்த பாக்கம் உம் உறை நனி
இனிதுமன் அளிதோ தானே துனி தீர்ந்து
அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின்
மீன் எறி பரதவர் மட மகள்
மான் அமர் நோக்கம் காணா ஊங்கே
பாடியவர்: வெள்ளியந் தின்னனார்
திணை: நெய்தல்
பொருள்:
முற்றாத பச்சை-மஞ்சளின் புறத்தே தன் சுற்றம் சூழ அமைந்திருப்பது போன்று, உப்பங்கழியில் மேய்ந்த இறா மீனின் காய்ந்த குவியலைப் புன்னை மர நிழலுக்குக் கொண்டுவந்து பரப்புவார்கள். முன்பெல்லாம் அந்தத் துறை எனக்கு இனிமையாக இருந்தது. இப்போது அதில் இனிமை இல்லை. அந்தத் துறை இரக்கப்படத் தக்கதாக உள்ளது. அகன்ற அல்குல், மெல்லிதாகிய இடை ஆகியவற்றைக் கொண்ட இவள், வலை வீசி மீன் பிடிக்கும் பரதவர் மக்களின் மகள். இவள் என்னை மான் போல் மருண்டு பார்க்கிறாள். இப்போதெல்லாம் நான் அவளது தயக்கத்தைப் (துனி) போக்கி இன்பம் காண்கிறேன். இதற்கு முன் அது இன்பம் தருவதாக இருந்தது என்று தோழியிடம் தலைவன் சொல்கிறான்.