


மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் டாக்டர் ஜி.ஆர் கார்த்திக் நினைவாக தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நேற்று காலையில் 7.10 மணிக்கு தொடங்கிய இந்த ஜல்லிக்கட்டு போட்டியை உசிலம்பட்டி ஆர்டிஓ சண்முக வடிவேல் பச்சைக்கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பற்றிய உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். வருவாய் துறையினர், மருத்துவ துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



இந்த போட்டியில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள், அதனை அடக்க 450மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். களத்தில் நின்று விளையாடும் காளையின் உரிமையாளருக்கும், காளைகளை அடக்கும் வீரர்களுக்கும் சைக்கிள், ட்ரெஸ்ஸிங் டேபிள், எல்.இ.டி டிவி, மிக்ஸி, உள்ளிட்ட பல்வேறுபரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. வழக்கம்போல் அனைத்து ஏற்பாடுகளும் அரசு வழிகாட்டுதல்படி செய்யப்பட்டிருந்தது. மாலை 3 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. இதில் 632 காளைகள் கலந்து கொண்டன. ஜல்லிக்கட்டில் மொத்தம் 56 பேர் காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக 7 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏராளமான பார்வையாளர்கள் அரங்கில் குவிந்து இருந்தனர். கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.




மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு காளையை அழைத்து வந்த அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த காளை உரிமையாளர் முத்துக்குமாரசாமி (வயது51) என்பவர் நெஞ்சுவலி ஏற்பட்டு அரங்கத்திலிருந்து மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.




