உசிலம்பட்டி அருகே மர்ம விலங்கு கடித்ததில் 3 சினை ஆடுகள் உள்பட 7 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரம் – பொட்டல்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன், இதே ஊரைச் சேர்ந்த ஜெயமணி என்பவரது தோட்டத்தை ஒத்திக்கு வாங்கி மக்காச்சோளம், சோளம் சாகுபடி செய்து விவசாயம் செய்து வருவதோடு, 7 ஆடுகளையும் வைத்து வளர்த்து வருகிறார்.
தினமும் ஆடுகளை வீட்டிலிருந்து மேய்ச்சலுக்கு தோட்டத்திற்கு அழைத்து சென்று மாலை வீட்டில் வந்து கட்டை வைப்பது வழக்கம், 7 ஆடுகளில் 3 ஆடுகள் சினை ஆடுகளாகவும் உள்ளன.

இந்நிலையில் இன்று 100 நாள் வேலைக்கு செல்வதற்காக தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்த போது அனைத்து ஆடுகளும் கழுத்து பகுதியில் காயத்துடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து, எழுமலை காவல் நிலைய போலீசார் மற்றும் கால்நடைத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
விரைந்து வந்த எழுமலை காவல் நிலைய போலீசார் மற்றும் கால்நடைத்துறையினர், ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்கு குறித்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கழுத்து பகுதியில் காயத்துடன் ஆடுகள் உயிரிழந்து கிடக்கும் நிலையில் நாய்கள் ஏதும் கடித்தது, கொன்றதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.