• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கோவையில் கைது

BySeenu

May 31, 2024

கோவை துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் சாலையில் வெள்ளக்கணறு பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த நான்கு சக்கர ஸ்கோடா வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இது குறித்து வாகனத்தில் வந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவையில் பல்வேறு இடங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அந்த வாகனத்தில் வைத்து இருந்த 5 லேப்டாப்கள், 9 செல்போன்கள் மற்றும் ரூபாய் 1 லட்சத்து 61 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர்.

மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் துடியலூர் அருகே உள்ள ஜி.என் மில் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், பிரதீப், நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஆதிஷ் கண்ணா மற்றும் வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரிய வந்தது. அதில் தலைமறைவான பிரபு என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கோவையில் பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் பிரபு என்பவரது வங்கி கணக்கில் இருந்த 18 லட்ச ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அந்த பணத்தை முடக்கியுள்ளனர் .கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வந்த கும்பல் வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் இருந்தது போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.