நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களுருவில் சனி, ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. கர்நாடாகாவில் டெல்டா மற்றும் ஓமிக்ரான் வகை கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்றைய தினம் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தொற்று வேகமாக பரவும் பெங்களுருவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவும் இதர மாநிலங்களுக்கு வேறு ஒரு திட்டத்தை வகுக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி பெங்களுருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 7ம் தேதி நிறைவடைய இருந்த இரவு நேர ஊரடங்கும் அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பெங்களுருவில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 6ம் தேதி முதல் ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடைபெறும். 10,11,12 வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் 50%இருக்கைகளுடன் செயல்பட வேண்டும். மராட்டியம், கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று கூறியுள்ள கர்நாடக அரசு, இரவு நேர ஊரடங்கையும் 21ம் தேதி வரை நீட்டித்துள்ளது.