சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரமாகும். அணையில் இருந்து வலது கால்வாய், இடது கால்வாய், வழியாக விஜய கரிசல்குளம் பனையடிப்பட்டி, கோட்டைப்பட்டி,இறவார்பட்டி, பந்துவார்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, படந்தால், கண்மாய் சூரங்குடி, உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இதன் மூலம் நெல்,மக்காச்சோளம், பருத்தி, மற்றும் காய்கறி, பழக்கன்றுகள், விவசாயம் செய்யப்படுகின்றன. நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. . மேலும் வல்லம்பட்டி மற்றும் நென்மேனி கண்மாய்களுக்கும் வெம்பக்கோட்டை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக அணை இரண்டு முறை முழுமையாக நிரம்பியது. இதனால் அணையில் நீர்மட்டம் 20 அடி உயரமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அணையின் ஷர்ட்டர்கள் பழுது பார்க்க கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 அடி தண்ணீர் வைப்பாற்றில் திறந்து விடப்பட்டது. நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டரை மாதங்களாக மழை பெய்யாததால் அணைக்கு தண்ணீர் வரவில்லை. இருப்பினும் தண்ணீர் சிறிது கூட குறையாமல் 18 அடி உயரம் தண்ணீர் உள்ளது. இதனால் கோடைகாலத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







