தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு பிப்.19 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.
தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4 ஆம் தேதியான இன்று நடைபெற்று வருகிறது. கும்பகோணம் மேயர் பதவி திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆட்டோ ஓட்டுநர் சரவணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் மறைமுக தேர்தலில் பங்கேற்க மேயர் வேட்பாளர் ஆட்டோ ஓட்டிக்கொண்டு வந்தார்.