மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி முனியாண்டி கோவில் அருகில் எதிரே வந்த அரசு பேருந்திற்கு வழி கொடுத்த மற்றொரு அரசு பேருந்தின் சக்கரங்கள் மண்ணில் புதைந்ததால் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதனால் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. குறுகலான சாலை காரணமாக அடிக்கடி அரசு பேருந்து விபத்தில் சிக்குவதாக பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் புலம்புகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 29 கே என்ற அரசுபேருந்து இரவு எட்டு மணிக்கு கருப்பட்டி சென்று திரும்பி வரும் வழியில் இரும்பாடி முனியாண்டி கோவில் அருகே எதிரே வந்த 28 அண்ணா பேருந்து நிலையம் கருப்பட்டி பேருந்திற்கு வழி கொடுக்க ஒதுங்கியதால் பேருந்தின் சக்கரங்கள் மண்ணில் புதைந்தது. இதன் காரணமாக அந்த பேருந்தில் பயணம் செய்த சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தார் சாலை அகலமாக இல்லாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து இந்த பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக கூட ஒரு பேருந்து இதே போல தனியார் மினி வேன் தலைக்குப்புற கவிழ்ந்ததில் 27 பேருக்கு மேல் காயம் பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளும் மதுரை மாவட்ட ஆட்சியரும் நேரில் பார்வையிட்டு சோழவந்தான் ரெட்டை பாலத்தில் இருந்து கருப்பட்டி இரும்பாடி வரை இருவழி பாதையாக அகலப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர், மேலும் அந்தப் பாதை வழியாக மின்விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.