கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து தொகுதிகளிலும் உள்ளம் தேடி இல்லம் நாடி ரத யாத்திரை நடைபெறுகிறது. கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே வந்திருக்க வேண்டும் ஆனால் தாயார் மறைவினால் வர இயலாமல் போனது என கூறினார். புயலே வந்தாலும் ஆலோசனை கூட்டம் நடக்கும், எவ்வித இடையூறும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது என தெரிவித்தார்.
இன்று காலை காவல்துறையினர் கட்சி கொடிகளை எல்லாம் அகற்ற சொல்லி இடையூறுகளை ஏற்படுத்தியதாக கட்சியினர் கூறினார்கள், நான் போகும் இடமெல்லாம் தேமுதிகவிற்கு மக்களும் காவல்துறையினரும் பக்கபலமாக உள்ளார்கள் ஆனால் கோவையில் மட்டும் ஏன் இப்படி உள்ளது என கேள்வி எழுப்பி கோவை மாவட்டத்திற்கு யார் பொறுப்பாளர் என்று சிரித்தபடி கேள்வி எழுப்பினார். அப்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் செந்தில் பாலாஜி என கோஷமிட்டனர்.
தேமுதிகவைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள் என்று திமுகவை பெயர் குறிப்பிடாமல் கூறிய அவர் சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று என்னும் கூட்டம் அவர்கள் என்றும் யார் இடையூறு செய்தார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை என கூறினார். உங்கள் வேலையை தேமுதிகவிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் உங்களைப் போன்று லஞ்சம் ஊழல் செய்து ஜெயிலுக்கு சென்றவர்கள் நாங்கள் அல்ல யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் காசு கொடுக்காமல் கூட்டத்தைக் கூட்ட முடியுமா? கூட்டணி இல்லாமல் ஜெயிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

கேப்டன் மறைந்து விட்டார் கட்சி மறைந்து விட்டது என்று கூறியவர்களெல்லாம் தற்பொழுது வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் என்றும் தேமுதிக அங்கம் வகிக்காமல் எந்த கட்சியும் ஜெயிக்க முடியாத நிலை உள்ளது என்றும் அனைத்து கட்சிகளும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ளார்கள் என தெரிவித்தார்.
காவல்துறையில் உள்ளவர்கள் கேப்டனின் உருவங்கள் தான் என்றும் கேப்டனை பார்த்து தான் காவல்துறையிலும் ராணுவத்திலும் பலரும் இணைந்தார்கள் இதனை ராணுவத்தில் இருப்பவர்களே தன்னிடம் கூறியுள்ளார்கள் என தெரிவித்தார்.
தேமுதிகவை பார்த்து பலரும் வியந்து போயிருக்கிறார்கள் என்றும் ஆளும் கட்சியும் இல்லை தற்போது ஆண்ட கட்சியும் இல்லை ஆனால் நம்முடைய கட்சி உள்ளது நாம் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தெரிவித்தார். மேலும் இங்குள்ள ஒவ்வொரு ஆண்களும் கேப்டன் தான் பெண்கள் ஒவ்வொருவரும் லேடி கேப்டன் தான் என தெரிவித்த அவர் கேப்டன் ஒரு புறம் லேடி கேப்டன் ஒரு புறம் இருக்கும் வரை இந்த கட்சியை யாராலும் தொட முடியாது. 2026 இல் தேமுதிக மிகப்பெரிய வெற்றியை பெரும் என தெரிவித்தார்.
நாம் கேப்டன் போட்டுக் கொடுத்த பாதையிலே பயணிப்போம் என்றும் வெகுவிரைவில் இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகர் அறிவிக்கப்படுவார். அவர் ஜூனியர் கேப்டன் கோவையின் செல்ல பிள்ளை என்றார். மரியாதை நிறைந்த ஊர் கோவை, மரியாதை என்றால் என்ன? சுத்தம் என்றால் என்ன? என்பதை கோவையில் தான் கற்றுக் கொள்ள வேண்டும் குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக கோவை இருந்தது ஆனால் தற்பொழுது இல்லை என்று குறிப்பிட்ட அவர் 2026க்கு பிறகு தேமுதிக கூட்டணி சுத்தம் செய்து காட்டும் என தெரிவித்தார். சிறுவாணி நீரையும் அசுத்தம் செய்து விட்டார்கள் என தெரிவித்த அவர் இதனை நினைத்து தலைகுனிகிறேன் என்றார். கோவை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக அப்போது இருந்தது ஆனால் தற்பொழுது இல்லை மீண்டும் கோவை மாவட்டம் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக மாற வேண்டும் என தெரிவித்தார்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய அவர் அதற்குக் காரணம் மது விற்பனை தான் என்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என தெரிவித்தார். பெண்கள் நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் நம்மை பாதுகாக்காது என்றும் கூறினார். மேலும் பெண்கள் லேட் நைட் யாரையும் சந்திக்காதீர்கள், ஏன் நாம் லேட்நைட்டில் வெளியில் செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பிய அவர் அந்த கல்லூரி மாணவி விமான நிலையம் பின்புறம் லேட் நைட் ஏன் சென்றீர்கள்? என்றார். ஒரு பெண் எப்பொழுது தனியாக இரவில் தைரியமாக செல்கிறாரோ அப்பொழுதுதான் நாடு சுதந்திரம் அடைந்தது என்று காந்தி காலத்தில் இருந்து நாம் கூறிக் கொண்டிருக்கிறோம் அப்படி இருந்தும் தற்பொழுதும் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்றார்.
மேலும் கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது என்றும் நாம் ஜெயித்த பிறகு இது குறித்து பிரதமரை சந்திப்பேன் எனவும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று அறிவித்தால் அதன்படி செயல்படுத்த வேண்டும் துபாய்க்கு இணையாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு கோவை மற்றும் மதுரை மக்களுக்காக மெட்ரோ ரயில் திட்டம் குறித்து தேமுதிக குரல் கொடுக்கும் எனவும் தெரிவித்தார்.
கோவையில் எஸ்ஐ எச் எஸ் காலனி சாய்பாபா காலனி மேம்பாலம் குறித்து நான் பலமுறை பேசியிருக்கிறேன் எனவும் ஆனால் தற்பொழுது வரை அது முடிக்கப்படவில்லை என தெரிவித்த அவர் கோவையில் பல்வேறு இடங்களில் பேட்ச் ஒர்க் தான் அதிகமாக உள்ளது என தெரிவித்தார்.
தினம்தோறும் கேப்டன் ஆலயத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்படுகிறது என தெரிவித்த அவர் இதுபோன்ற யாராவது செய்வார்களா எந்த அரசியல் கட்சியினராவது செய்வார்களா என கேள்வி எழுப்பி கட்சியினர் தேர்தல் காலத்தில் தான் வருவார்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள் இலவசங்களை கொடுப்பார்கள் எனவும் டாஸ்மாக்கில் இருந்து வரும் பணத்தை தான் கொடுப்பார்கள் அதையெல்லாம் மக்கள் பணம் தான் என தெரிவித்த அவர் மக்கள் கேட்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என விமர்சித்தார்.
SIR குறித்துப் பேசிய அவர், வட நாடுகளில் இருந்து பல பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள் எனவும் அவர்களுக்கெல்லாம் இங்கு ஓட்டுரிமை கொடுத்து தமிழர்களாக மாற்றுவதாக பல்வேறு தகவல்கள் வருகிறது என்றும் இதன் பணி சுமையின் காரணமாக ஒரு பெண் அதிகாரி இறந்து விட்டதாகவும் குறிப்பிட்ட அவர் இது குறித்து மத்திய மாநில அரசுகள் உண்மையாகவே பணி சுமை ஏற்படுகிறதா என்று ஆராய்ந்து பணி பாதுகாப்பு தர வேண்டும் இது அவர்களது கடமை என தெரிவித்தார். SIR என்றால் வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணிபுரிகிறீர்கள் என்றால் இங்கு வந்து பணிபுரியலாம் சம்பளம் வாங்கலாம் ஆனால் ஓட்டுரிமை என்பது அவர் அவர்கள் பிறந்த மாநிலத்தில் தான் இருக்க வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் தமிழர்களுக்கும் பல ஆண்டுகளாக இங்கு வசிப்பவர்களுக்கும் தான் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என கூறிய அவர் மக்களின் ஓட்டுகளை திருட வேண்டும் என்று நினைத்தால் மக்கள் புரட்சி வெடிக்கும் என கூறினார். இயற்கை வளங்களை எல்லாம் திருடிவிட்டு தற்பொழுது மக்களின் ஓட்டுகளையும் திருடுகிறீர்கள் என்றால் இதை விட கேவலம் என்ன உள்ளது என கேள்வி எழுப்பினார். எஸ் ஐ ஆர் என்றால் என்ன என்பதை மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என தெரிவித்தார். இதற்கு பல்வேறு காரணங்களை மத்திய அரசு கூறினாலும் எந்த திட்டமாக இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொண்டால் தான் அந்த திட்டம் வெற்றி பெறும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் எந்த திட்டமாக இருந்தாலும் அது தோல்வி அடைந்தது தான் என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாளை மறுநாள் கோவை புறநகரில் கேப்டன் ரத யாத்திரை நடக்க இருக்கிறது என தெரிவித்தார். SIR பணிச்சுமையில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். SIR யில் பணிச்சுமை உள்ளது என்றால் மத்திய அரசு அதனை கவனத்தில் கொண்டு கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் இது குறித்து மக்களுக்கு வெள்ளை அறிக்கை போன்று புரிய வைக்க வேண்டும் என தெரிவித்தார். SIR முறையாக நடக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்த அவர் அனைத்து மக்களுக்கும் ஓட்டுரிமை உள்ளது ஆனால் அந்த ஓட்டுக்கள் திருடப்படுமேயானால் மக்கள் அதனை பார்த்துக் கொள்வார்கள் மக்கள் புரட்சி வெடிக்கும் என தெரிவித்தார்.
ஜனவரி 9 ம் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் என கூறினார். தமிழகம் தமிழக மக்களின் நலன் கருதி தான் கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார். இந்த முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு சாத்தியங்கள் அதிகமாக உள்ளது என தெரிவித்த அவர் கூட்டணி மந்திரி சபை வரும்பொழுது அதிகாரம் அனைவருக்கும் பகிர்ந்து தரப்படும் போது மக்களின் நலனை நாங்கள் முன் நிறுத்துவோம் என தெரிவித்தார் . 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் இதுவரை தமிழக அரசியலில் நாம் பார்க்காத தேர்தலாக அமையும் எனவும் தெரிவித்தார்.
ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மாநாடு 2.o நடைபெறும் அதில் கூட்டணி குறித்து தெளிவான முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார்.
கோவை மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார். மேலும் கோவை மதுரைக்கு இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
2026 இல் பல்வேறு கட்சிகள் கூட்டணிகள் பற்றி ஒவ்வொருவரும் பேசிவரும் நிலையில் நான்கு முனை போட்டியாக இருக்க கூடுமா என்ற கேள்விக்கு சீமானை ஏன் விட்டு விட்டீர்கள் அவரும் களத்தில் தானே இருக்கிறார் என்றார். மேலும் மக்கள் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர்களும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதலில் ஆளும் கட்சியினர் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும் தேமுதிக வகிக்கும் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் கூட்டணி மந்திரி சபை அமையும் என தெரிவித்தார். கூட்டணி மந்திரி சபை என்பது தமிழ்நாட்டில் இதுவரை பார்த்ததில்லை ஆனால் வட நாடுகளில் உள்ளது என தெரிவித்த அவர் இது தற்பொழுது தமிழகத்திற்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார்.








