• Fri. Oct 24th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சர்வீஸ் சாலை அமைப்பதில் போட்டி..,

ByKalamegam Viswanathan

Sep 1, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் புதிய பேருந்து நிலையம் கட்டவும் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது ரயில்வே நிர்வாகம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டும் மாநில அரசு தங்களுக்குரிய இடத்தில் மேம்பால ப்பணிகளை முடிக்காத நிலையில் ரயில்வே மேம்பாலம் பணிகள் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக கட்டி முடிக்கப்படாமல் இருந்தது ஒரு வழியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடியாத நிலையில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது இதனிடையே 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.

அப்போது திமுக சார்பில் போட்டியிட்ட வெங்கடேசன் தன்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தால் உடனடியாக பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் மேலும் ரயில்வே மேம்பாலமும் திறக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதனை நம்பி சோழவந்தான் பகுதி மக்கள் வெங்கடேசன் எம் எல் ஏ வுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்தனர் ஆனால் வெற்றி பெற்ற வெங்கடேசன் எம் எல் ஏ இரண்டு ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தாததால் பணிகள் முடிக்காமல் இருந்தது இந்த நிலையில் அமைச்சர் மூர்த்தி ரயில்வே மேம்பால பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக பணிகளை முடிக்க உத்தரவிட்டு சென்றார் அதன் பின்பும் பணிகள் முடிக்கப்படாமல் இருந்த நிலையில் வேறு வழியில்லாமல் ரயில்வே மேம்பாலத்தை முறைப்படி திறக்காமல் வாகனங்கள் செல்லலாம் என கூறியதாக தெரிகிறது.

இதனை அடுத்து கடந்த 2024 ஜனவரி மாதம் முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சோழவந்தான் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்

ஆனால் மழை விட்டும் தூறல் விடவில்லை என்ற பழமொழிக்கேற்ப
பேருந்து நிலையத்திற்கு தேவையான சர்வீஸ் சாலை மற்றும் பேருந்துகள் மேம்பாலத்தில் இருந்து வந்து திரும்புவதற்கான ரவுண்டானா ஆகியவை தயார் செய்யாத நிலையில் எந்த பேருந்தும் பேருந்து நிலையத்திற்குள் வராமல் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நின்று சென்றது.

இது குறித்து பொதுமக்கள் பலமுறை சமூக வலைதளங்கள் மூலமும் வெங்கடேசன் எம்எல்ஏ சோழவந்தான் பகுதிக்கு வருகை தரும் போதும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது

இந்த நிலையில் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்கும்போது சர்வீஸ் சாலை அமைத்துக் கொடுத்தால் தான் பேருந்து உள்ளே வந்து செல்ல முடியும் சர்விஸ்சாலை அமைக்கும் இடத்தில் மின்கம்பம் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என கூறியதாகவும்,

இது குறித்து மின்துறை அதிகாரிகளிடம் கேட்டால் பேரூராட்சி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் பேருந்து நிலையம் திறப்பது மட்டுமே எங்களது வேலை மற்ற பணிகளை அந்தந்த துறைகளே செய்ய வேண்டும் என அவர்கள் தரப்பிலும் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோழவந்தான் அரசு மருத்துவமனை முன்பு புதிய டிரான்ஸ்பார்மர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறப்பதற்கு தந்த வெங்கடேசன் எம்எல்ஏவிடம் இதுகுறித்து திமுகவினர் கூறியதாக தெரிகிறது.

அப்போது அருகில் இருந்த மின்துறை அதிகாரிகளிடம் சர்வீஸ் சாலை அமைப்பதற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்தி மாற்று இடத்தில் வைக்கவும் என உத்தரவிட்டதாக அருகில் இருந்த நிர்வாகிகள் மூலம் கூறப்பட்டது.

ஆனால் புதிய ட்ரான்ஸ்பார்மர் திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் சர்வீஸ் சாலை அமைக்க இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்றுவதற்கு மின்சார துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. இதன் காரணமாக பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வருவது இல்லை.

ஆகையால் பொதுமக்கள் பேருந்துக்காக பல இடங்களுக்கு அலைந்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே மேம்பாலம் பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு இதுவரை வரவில்லை இனிமேலும் வருமா எனவும் தெரியவில்லை அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் அனேகமாக 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மீண்டும் எங்களை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால் சோழவந்தான் பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறுகின்றனர்

மேலும் பெயர் குறிப்பிட விரும்பாத பேரூராட்சி கவுன்சிலர் கூறுகையில்,

விரைவில் இது குறித்து சோழவந்தான் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வரப் போவதாக தெரிவித்தார்.

எது எப்படி இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் உள்ள பேருந்து நிலையத்தை இனிமேலாவது பேரூராட்சி நிர்வாகம் மின்சாரத்துறை போக்குவரத்து துறை ஆகிய மூன்று துறையை சேர்ந்த அதிகாரிகள் ஒன்றிணைந்து ஒரு தீர்வு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மூன்று துறைகளுக்கு இடையே உள்ள நீயா நானா போட்டியால் சுமார் 50 கோடிக்கு மேல் செலவு செய்து கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் மற்றும் சோழவந்தான் பேருந்து நிலையம் பொது மக்களுக்கு பயன்படாத நிலையில் வெறும் காட்சி பொருளாக இருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர்.