புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.தங்கவேலு. புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே ஆலங்குடி பகுதி திருச்சி மாவட்டத்தில் இருந்தபோது இப்பகுதியில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வளர்த்தெடுத்தவர். ஊராட்சி மன்றத் தலைவர் முதல் கூட்டுறவு சங்கத் தலைவர், திருவரங்குளம் ஒன்றிய பெருந்தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு திமுகவின் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராகவும் இருந்தார்.

அவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 20ஆம் தேதி மறைவுற்றதைத் தொடர்ந்து ஆண்டு தோறும் அவருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு நினைவேந்த நிகழ்வில் காலை முதல் மாலை வரை கட்சியின் பல்வேறு பொறுப்பில் உள்ளவர்களும் திமுகவின் அனுதாபிகளும் தொண்டர்களும் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர்களும் வந்து கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து தங்களது வீர வணக்கத்தை செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டு அமைச்சர்களான கனிமவளத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்ல பாண்டியன் ஆகியோர் சென்னையில் இருந்தாலும் மாலை நேரத்தில் வருகை தந்து கே.பி.கே.தங்கவேலு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் திமுகவின் அனுதாபிகளும் இளைஞர் அணியினரும் மகளிர் அணியினரும் ரத்ததான நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்து 30க்கும் மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்தனர்.

இரத்ததான நிகழ்வை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி குருதிக்கொடைப் பிரிவு மருத்துவர் சரவணன் தனது குழுவினருடன் ஒருங்கிணைத்து கொடையாளர்கள் வழங்கிய குருதிகளைச் சேகரித்து மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு இவ்வாறு குருதிக்கொடை வழங்கியது குருதிக்கொடை வழங்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







