• Sat. Dec 6th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சென்னையில் ஓடுபாதை தெரியாத அளவு பனிமூட்டம் – விமான சேவை பாதிப்பு

ByP.Kavitha Kumar

Feb 7, 2025

சென்னையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சரப்பாக்கம், சோத்துப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூடியுள்ளதால் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று காலையில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. அத்துடன் ஓடுபாதை தெரியாத அளவுக்கு பனிமூட்டமாக இருந்தது. இதனால் மும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து சென்னை வர வேண்டிய விமானமும் ஒரு மணி நேரம் தாமதமானது. மேலும் கொழும்பு, டெல்லி, துபாய் செல்லும் விமானங்களும் 20 நிமிடங்கள் தாமதமாகவே புறப்பட்டன.

மேலும், சென்னையில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால் செங்கல்பட்டு – கடற்கரை வரை செல்லும் அனைத்து புறநகர் ரயில்களும், தென் மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. பனி அதிகமாக இருக்கும் பகுதிகளில் குறைந்த வேகத்தில் ரயிலை இயக்குமாறு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.