சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண்களின் உடல்நலம் மற்றும் கருப்பை நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஏராளமான பெண்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபயணம் மேற்கொண்டனர்.
பெண்களிடையே அதிகரித்து வரும் கருப்பை தொடர்பான நோய்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ராவ் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.பெண்கள் தங்களது உடல்நலத்தை முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், கர்ப்பப்பை நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் நடைபெற்ற இந்த வாக்கத்தானை ஆர்.எஸ்.புரம் காவல் ஆய்வாளர் நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பங்கேற்பாளர்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பொதுமக்களிடம் கருப்பை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



