• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளியின் கட்டிடம் விரிசல்.., உசிலம்பட்டி MLA ஆய்வு

ByKalamegam Viswanathan

Jun 28, 2023

மதுரை அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பன்னியான் ஊராட்சி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்களுக்கு போதிய இட வசதி இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு இருந்த நிலையில்., கடந்த 2021-22 ஆம் கல்வி ஆண்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பரிந்துரைக்கப்பட்டு நபார்டு வங்கி மூலம் 55 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

கட்டிடப்பணிகள் முடிந்து கடந்த மார்ச் மாதம் பொதுப்பணித்துறையினரால் ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கூடுதல் வகுப்பறை கட்டிடத்தின் ஒரு அறையில் கடந்த வாரம் முதல் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மற்றொரு அறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்காக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரான அய்யப்பனிடம் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து., ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துக் கொடுப்பதற்காக நேற்று மாலை பள்ளிக்கு திடீரென ஆய்வு மேற்கொண்ட MLA அய்யப்பன் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்தபோது கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். புதிதாக கட்டப்பட்ட நிலையில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதை கண்ட MLA ஆசிரியர்களிடம் மாணவர்களின் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால் மாணவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டாம் என வலியுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் கூறும் போது,

உசிலம்பட்டி சட்டமன்றத்திற்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட கள்ளர் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்ட போது தரம் இல்லாத கம்பி மண் சிமெண்ட் கட்டுமான பொருட்களைக் கொண்டு தண்ணீர் ஊற்றி கட்டப்படவில்லை எனவும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு டிசம்பர் 2022 ஆம் ஆண்டு தரமான கட்டிடங்கள் கட்ட வேண்டுமென கடிதம் எழுதியிருந்தேன். அதன் அடிப்படையில் செயற்பொறியாளர் கட்டிட பிரிவிலிருந்து அனைத்தும் தரமான முறையில் கட்டப்பட்டதாக பதில் கடிதம் வந்துள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆய்வு செய்ய வந்தபோது அனைத்து சுவர்களும் விரிசல் பட்டுள்ளது. ஆறு மாதத்தில் 90% பழுதடைந்து விடும். ஆதலால் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க முறைப்படி மனு கொடுக்க உள்ளேன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.