விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32) முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு திருவில்லிபுத்தூரில், மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொது கூட்டம் நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில் விக்னேஷ் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு பணியிலிருந்த அவர் திடீரென்று மயங்கி கிழே விழுந்தார். உடன் இருந்த போலீசார் விக்னேஷை உடனடியாக மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், விக்னேஷ் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறினார். இதனையறிந்த சக போலீசார் கண்கலங்கி அழுதனர். தகவலறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசப்பெருமாள், திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, மாரடைப்பால் உயிரிழந்த முதல்நிலை காவலர் விக்னேஷின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாதுகாப்பு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு முதல்நிலை காவலர் உயிரிழந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.