வைகை அணை மீண்டும் நிரம்பி வரும் சூழலில் நீர் இருப்பை கண்காணித்து உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்காக 58 கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – என விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைத்தீர்க்கும் கூட்டம் வட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது குறைநிறைகளை கோரிக்கையாக முன் வைத்தனர்.
மேலும், வைகை அணை மீண்டும் நிரம்பி வரும் சூழலில் உசிலம்பட்டி பகுதியில் கண்மாய்கள் வறண்டு காணப்படும் நிலையை கருத்தில் கொண்டும், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காகவும், வைகை அணையில் உள்ள உசிலம்பட்டி 58 கால்வாய் மதகு பகுதிகளை சரி செய்து, நீர் இருப்பை கண்காணித்து குடிநீருக்காக தண்ணீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
58 கால்வாயில் தண்ணீர் திறக்காத பட்சத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் தன்னெழுச்சியாக உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தையும், பொதுப்பணித்துறை அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராடும் நிலை ஏற்படும் என விவசாயிகள் எச்சரிக்கையும் விடுத்தனர்.