ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17-ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மூன்று மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் மார்ச் மாதம் 26 ஆம் தேதி அன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் 11 மீனவர்களையும் கைது செய்து இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர் .
தகவல் அறிந்து மத்திய மாநில அரசுகள் பேச்சு வார்த்தைக்கு பின்னர், இலங்கை அரசு 14 மீனவர்களையும் விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட இந்த 14 மீனவர்கள் அனைவரையும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் 14 மீனவர்களுக்கு இந்திய தூதரக வாயிலாக சென்னை விமான நிலையத்திற்கு விமான மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு சுங்க சோதனை குடியுரிமை சோதனை என அனைத்து சோதனைகளையும் முடித்த பின்பு வெளியே வந்த மீனவர்கள் அனைவரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.