கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பயன் பெறும் விதமாக தூத்துக்குடி ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் உர நிறுவனத்தில் இருந்து கோவைக்கு சரக்கு இரயில் மூலம் 1,300 மெட்ரிக் டன் உரம் வந்தடைந்தது.
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் உர நிறுவனத்தில் இருந்து, சரக்கு இரயில் மூலம் சுமார் 1300 மெட்ரிக் டன் உரம் கோவை வந்தடைந்தது. ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் உர நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் வெங்கடேஷ்,மாநில விற்பனை மேலாளர் ஜெயபாலன் ஆகியோர் முயற்சியின் மூலமாக கொண்டு வரப்பட்ட இதில், யூரியா, பாரத் டி.ஏ.பி.பாரத் காம்ப்ளக்ஸ், பாரத் சூப்பர் பாஸ்பேட் போன்ற உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் இரயில் நிலையத்திற்கு வந்த உரத்தை, வேளாண் அதிகாரிகள் பெருமாள்சாமி, சக்திவேல் மேற்பார்வையில் லாரிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டது. இதில் கோவை கவுண்டம்பாளையம், சக்தி ஃபெர்டிலைசர் உர நிறுவனத்தின் உரிமையாளர் பாண்டியன் ஸ்பிக் மற்றும் க்ரீன் ஸ்டார் உர நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் சந்திரசேகரன், உதவி மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். கோவை வந்த உரங்கள், கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான அளவு பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு பெறப்பட்ட யூரியா உரம் அனைத்து வட்டாரங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்க விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளது. இதன் மூலம்,மானிய விலை உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு தங்கள் கடை மூலம் உரம் விற்பனை செய்தாலோ, மானிய விலை உரங்களை மற்ற மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.