

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த ஜூலை மாதத்தில் ஏற்பட்ட அதிக மழைப்பொழிவின் காரணமாக ஆங்காங்கே சிற்றருவிகள் தோன்றி சுற்றுலாப் பயணிகளை மகிழ்வித்து வந்தன. மேலும், அவ்வப்போது பலத்த காற்று வீசி வருவதாலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. அதே போல இன்று 7.8.2021 7வது வளைவில் சாலையோரமாக இருந்த மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அந்த வழியாக வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். உடனே மின்சார ஊழியர்கள் மற்றும் ஊர்மக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, சாலையை வாகனம் செல்வதற்கு வழிசெய்தனர். சாலையில் மரம் சாய்ந்து விழுந்ததால், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

