திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 22ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
உலகப்புகழ் பெற்ற கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.இந்நிலையில், சூரசம்ஹாரத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் 26ம் தேதி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல், சூரசம்ஹாரம் நிறைவடைந்தபின் பக்தர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 27ம் தேதி திருச்செந்தூரிலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.”




