இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கையை கண்டித்து, காரைக்கால் மீனவர்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு நாகை மாவட்டம் மீனவர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் ஈடுபட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட இசை படகுகள் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பைபர் படகுகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.
காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு மற்றும் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து, கடந்த எட்டு நாட்களாக காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காரைக்கால் மீனவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களும் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்த காரணமாக அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நாகூர், செருதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக துறைமுகப் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.