கோவையில் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் 41 தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தீர்மானம் படிக்க நேரம் ஒதுக்கவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரன கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிக்கான ஒப்பந்தம், மாநகராட்சி மேல் நிலை, உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்க்கான கற்றல் கையேடு வழங்க நிதி ஒதுக்கீடு, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2060 கழிப்பிடங்கள் கட்ட ஒப்பந்தம், மற்றும் மாநகராட்சி முழுவதும் பாதாளச்சாக்கடை, குடிநீர் குழாய் அமைத்தல், சாலை பணிகள் ஒப்பந்தம் உள்ளிட்ட 41 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக கூட்டம் ஆரம்பித்த உடன் தீர்மான நகல்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. உடனடியாக மேயர் கல்பனா தீர்மானங்கள் ஏற்படுவதாகவும், அதன் மீது சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம் எனக்கூறினார். அப்போது குறுகிட்ட அதிமுக உறுப்பினர் பிரபாகரன் தீர்மானம் படிக்க நேரம் கொடுக்காமல் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது என கேள்வி எழுப்பியதால் மன்ற உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 41 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது சில உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர்.