• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சத்குரு குறித்த அவதூறு செய்திகளை நீக்க நக்கீரனுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..,

BySeenu

Mar 20, 2026

ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குருவிற்கு எதிராக வெளியிடப்பட்ட அவதூறான வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை நீக்குமாறு நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (19-03-2026) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை வரவேற்றுள்ள ஈஷா அறக்கட்டளை, பொய்யான மற்றும் அவதூறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவதூறுகளால் ஈஷாவின் நற்பணிகளைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

சத்குரு மற்றும் ஈஷா அறக்கட்டளையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி நக்கீரன் ஊடகம் தொடர்ந்து மிகவும் அவதூறான, ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க வகையிலான செய்திகளை வெளியிட்டு வந்தது. இத்தகைய அவதூறு செய்திகளை நீக்கக் கோரியும், வருங்காலங்களில் இது போன்ற செய்திகளை வெளியிடுவதை தடுக்க கோரியும், ஈஷா அறக்கட்டளை சார்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஈஷா சார்பில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருந்த காணொளிகள் மற்றும் கட்டுரைகளையும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இடமாற்ற மனுவின் போது வெளியிடப்பட்ட அவதூறுகளையும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும், மேலும் இது போன்ற தகவல்களை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், இதன் மீதான உத்தரவை ஒத்திவைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று வெளியான நீதிமன்ற உத்தரவில், ஈஷா அறக்கட்டளை மற்றும் சத்குரு குறித்து நக்கீரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை நாங்கள் மனதார வரவேற்கிறோம். சில ஊடகங்களும் தனிநபர்களும் எந்தவித ஆதாரமும் இன்றி, பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் திட்டமிட்டுத் தொடர்ந்து பொய்யான மற்றும் அவதூறான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது துரதிர்ஷ்டவசமானது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஈஷா அறக்கட்டளை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்விற்காகவும் சமூக மேம்பாட்டிற்காகவும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. இத்தகைய நற்பணிகளைச் சீர்குலைக்கவே இந்த திட்டமிட்ட ஒருங்கிணைந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது ஈஷா தொடர்ந்து தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கும். எந்தவொரு அவதூறும் அல்லது திட்டமிட்டுப் பரப்பப்படும் தவறான தகவல்களும் மனித நலனுக்கான எங்களின் செயல்களை தடுத்து நிறுத்தாது.” எனக் கூறப்பட்டு உள்ளது.