• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – முன்பதிவு தொடங்கியது

நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு வரும் 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில் இதற்கான முன்பதிவு தொடங்கியது.


இந்தியாவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து தடுப்பூசிக்கான பரிசோதனை நடைபெற்று வந்தது. அதில், 2 முதல் 8 வரை, 8 முதல் 14 வரை, 12முதல் 18 வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை நடைபெற்றது. இந்த பரிசோதனை எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நடத்தப்பட்டது.

இந்த பரிசோதனையில் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருந்துள்ளது. இதனால், பயோடெக் நிறுவனம் தனது தடுப்பூசியை மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்த நிலையில், பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை 12 லிருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் வழங்கியது.


இதைத்தொடர்ந்து, மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் ஜனவரி 3-ஆம் தேதியிலிருந்து 15- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என அறிவித்தார். இதனால், 15- 18 வயதான சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட கோவின் செயலியில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என கோவின் தலைவர் ஷர்மா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நாடு முழுவதும் 15-18 வயதினருக்கு வரும் 3-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அனுமதி அளித்த நிலையில் இதற்கான முன்பதிவு கோவின் இணையதளத்தில் தொடங்கியது. ஆதார் இல்லாதோர் பத்தாம் வகுப்பு ஐடி கார்டு மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.