சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டசாமி பாதயாத்திரை இன்று தொடங்கியது.
அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு வடக்கு வாசலில் தவம் இருந்தார். அப்போது திருவனந்தபுரம் மன்னர் சுவாதி திருநாள் தனது படையை அனுப்பி அய்யா வைகுண்டசாமியை கயிறு கட்டி அடித்து துன்புறுத்தி இழுத்துச் சென்றனர். இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் வரை வைகுண்ட சாமி பாதயாத்திரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 186-வது பாதயாத்திரை இன்று வெள்ளிக்கிழமை சாமிதோப்பு முத்திரிக் கிணற்றில் இருந்து தொடங்கியது.
சாமிதோப்பு அன்புவனத்தில் நடைபெற்ற பாதயாத்திரை தொடக்க நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார். மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பி. ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் தினமலர் நிர்வாக இயக்குனர் தினேஷ், அன்புவனம் இயக்குனர் தர்மரஜினி, திமுக ஒன்றிய செயலாளர் பாபு, , வட்டார தலைவர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பாதயாத்திரையானது சுசிந்திரம், நாகர்கோவில், பத்மநாபபுரம், தக்கலை, அழகியமண்டபம், மார்த்தாண்டம்,அமரவிளை வழியாக வருகிற 22-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடைகிறது.