• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஓட்ட முயன்ற பெண்ணால் பரபரப்பு !!!

BySeenu

Mar 20, 2026

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகம் எதிரே புதிய பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கேரளா, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் அமாவாசை என்பதால் ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலுக்கு நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இரவு பேருந்து நிலையத்தில் இருந்து பெண் ஒருவர் திடீரென ஆனைமலைக்கு செல்வதற்கு நின்ற சிறப்பு பஸ்ஸின் கண்ணாடியில் கல் வீசினார். இதில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து பொள்ளாச்சி நகரம் மேற்கு போலீஸ்சார் அங்கு வந்து விசாரித்த போது அந்த பெண் மனநல பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் பஸ் நிலையத்தில் இருந்து அந்தப் பெண் அனுப்பி வைத்தனர்.

பின்னர் நேற்று காலை பள்ளி கல்லூரிக்கு வேலைக்கு செல்வோர் என பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் நின்று கொண்டு இருந்தனர். மேலும் மாசாணி அம்மன் கோவிலுக்கு செல்வதற்காக பக்தர்கள் பஸுக்காக காத்து இருந்தனர். அப்பொழுது திடீரென அங்கு நின்ற ஒரு அரசு பேருந்துக்குள் அந்த பெண் ஏறினார். பின்னர் சிறிது நேரத்தில் டிரைவர் இருக்கையில் அமர்ந்து பஸ் இயக்க முயற்சி செய்தார். கண்டக்டர்கள் உடனடியாக அருகில் கிடந்த கற்களை பேருந்தின் டயர் அடியில் போட்டனர். அந்தப் பெண் பஸ்ஸில் அலாரத்தை விடாமல் அடித்ததால், பயணிகள் ஆத்திரம் ஏற்பட்டது.

பின்னர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்னர் பஸ்ஸில் இருந்து கீழே இறக்கினார்கள். கீழே வந்த பெண் திடீரென பஸ்ஸில் டயருக்கு அடியில் படுத்து ரகளையில் ஈடுபட்டார். பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் பரபரப்பாக காணப்பட்டது.