• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

மயக்கமருந்து கலந்துகொடுத்து 10ம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு பாலியல் துன்புறுத்தல்

Byமதி

Dec 7, 2021

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் மீரட் நகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் செய்முறை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வதாக கூறி பள்ளி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 10ம் வகுப்பு மாணவிகள் 17 பேருக்கு உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் ரீதியாக மாணவிகளை துன்புறுத்திய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

கடந்த நவம்பர் 20ம் தேதியன்று ஆண் மாணவர்களை வரவழைக்காமல் மாணவிகளை மட்டும் வரவழைத்த பள்ளியின் மேலாளர் அந்த மாணவிகளை செய்முறை வகுப்புகளுக்காக வேறு ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.அங்கு மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அதனை சாப்பிட்ட மாணவிகள் மயக்கம் அடைந்திருக்கின்றனர்.

அப்போது இரண்டு பள்ளியின் மேலாளரும் சேர்ந்து மயங்கிக் கிடந்த மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கின்றனர். மேலும் மயக்கம் தெளிந்த மாணவிகளிடம் இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது மீறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டி வீடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.

ஒரு சில மாணவிகள் மிரட்டலுக்கு பயந்த நிலையில், சில மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் நடந்தது குறித்து தெரிவிக்க, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் பள்ளிகளின் செல்வாக்கினால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.

கிராமத் தலைவர் மாவட்ட எஸ்.பிக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்திருக்கிறார். மேலும் சில பெற்றோர் பாஜக எம்.எல்.ஏ உத்வலை சந்தித்து முறையிட்ட பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பள்ளி நிர்வாகிகள் மீது போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் தலைமறைவாகினர். அதில் ஒருவர் தற்போது கைதாகியுள்ளார்.

இது குறித்து பாஜக எம்.எல்.ஏ உத்வல் கூறுகையில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் 8ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 10ம் வகுப்பு வரை மாணவர்களை சேர்த்திருக்கின்றனர். இரு பள்ளிகளின் அங்கீகாரங்களையும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.