இந்தியாவிற்கு அதிகமான அன்னிய செலவாணியை பெற்று தரும் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு வஞ்சனை குமரி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளம் விரிவாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் 9 மீனவ கிராம பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட குழுவினருடன் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் ஆலோசனை நடத்தினார்.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 1972 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்த மண்டபம் திறக்கப்பட்டது. இந்த மண்பத்திற்கு தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது.
இதற்காக கன்னியாகுமரி வாவத்துறையில் ஒரு படகு தளமும், விவேகானந்த பாறையில் ஒரு படகு தளமும் அமைக்கப்பட்டு படகு சேவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டில் குமரிக் கடலில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. தற்போது விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் ஆகிய இரண்டு நினைவு சின்னங்களையும் இணைக்கும் வகையில் 38 கோடி ரூபாய் செலவில் கடல் நடுவே கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது.
கண்ணாடி பாலத்தை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

படகு சேவை மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்கு மூன்று படகுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக கூடுதலாக மூன்று படகுகள் வாங்கப்படும் என தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் அறிவித்தார்.
இந்நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையை ஒட்டி உள்ள படகு தளத்தை 14 கோடி ரூபாய் செலவில் விரிவு படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்து இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தற்போது 20 மீட்டர் நீளத்தில் உள்ள இந்த படகு துறையை 106 மீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தி கூடுதலாக மூன்று படகுகள் நிறுத்தும் வகையில் திட்டம் தயார் செய்து செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.

இந்நிலையில் இந்த படகு தளம் விரிவு படுத்தப்பட்டால் தங்களின் மீன் பிடி தொழில் பாதிப்புக்கு உள்ளாகும். தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்பு அமையும் என்று கன்னியாகுமரி, வாவத்துறை பகுதி மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்தும் தீர்வு கிடைக்காததால்
கடந்த மார்ச் 13 ஆம் தேதி இதுகுறித்து நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி தலைமையில் ஒரு சமாதான கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை, ஐஐடி நிபுணர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை , மீன் துறை அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ள
கன்னியாகுமரி, வாவத்துறை, சிலுவை நகர், கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, மேலமணக்குடி, புதுக்கிராமம் ஆகிய 9 கடலோர கிராமங்களை சேர்ந்த பங்கு ஊர் நிர்வாகிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் ஆலோசனை.
இந்நிலையில் இப்பிரச்சினை குறித்து மீனவ மக்களிடம் நேரில் கருத்து கேட்பதற்காக நேற்று கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சின்னமுட்டம் மீன் துறை இயக்குனர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா, ஆர்.டி.ஓ காளீஸ்வரி, கன்னியாகுமரி டி.எஸ்.பி மகேஷ் குமார், தாசில்தார் முருகன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் சவுந்திர பாண்டியன், மீன் துறை உதவி இயக்குனர் தீபா, நகராட்சி சுகாதார அலுவலர் முருகன், உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மீனவர்கள் பிரதிநிதிகள் தரப்பில் பங்கு தந்தையர்கள் அந்தோனி பிச்சை ( புதுக்கிராமம்), உபால்டு ( கன்னியாகுமரி), சுனில் ( கோவளம்), மேக்சன் ( சின்ன முட்டம்), கிங்ஸ்லி ( ஆரோக்கியபுரம்) மற்றும் கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டான்லி, பொருளாளர் ரூபன், வாவத்துறை துணைத்தலைவர் கோஸ்மான் சின்னமுட்டம் துனைத்தலைவர் கண்காட்சி மற்றும் 7 ஊர்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் படகுதுறை நீட்டிக்கப்படுவதால் மீனவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறித்து மீனவர்கள் கலெக்டரிடம் விளக்கி கூறினர். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரச்சனைக்குரிய இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது குறித்து அதிகாரிகளுக்கு சில மாற்று அறிவுரைகளை ஆட்சியர் வழங்கியுள்ளார். இதனையடுத்து இப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.