நாகப்பட்டினம் சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா மற்றும் பகவத்கீதை பாராயண விழா ஆச்சார்யா ராமகிருஷ்ணாந்தா தலைமையில் நடைபெற்றது.
இந்துக்களாக இருப்போம் என்ற புத்தகத்தை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

தொடர்ந்து 50 கோயில்கள் கும்பாபிஷேகம் நடைபெற்ற உதவியவர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோருக்கு அவர் நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு காரணமாக இருந்த குழந்தை லக்ஷனாவிற்கு அண்ணாமலை கீரிடம் அணிவித்தார். இதை தொடர்ந்து அண்ணாமலை பேசியது: சின்மயா மிஷன் ஆரம்பிக்கப்பட்டு 370 அமைப்புகள் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் 50 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் சின்மயா மிஷனால் செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
200 ஆண்டு காலமாக நாம் பாதுகாத்த பாரம்பரியத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் உடைத்தனர். இன்று கீழே இருப்பவன் நாளை மேலே வருவான். மேல் இருப்பவன் கீழ் வருவான். அதனால் எதை பற்றியும் கவலைப்படக்கூடாது. எதன் மீதும் நாம் பற்று கொண்டு வாழக்கூடாது.
இந்து தர்மம் கூட கால, காலத்திற்கு புதுப்பித்து வந்துள்ளது. இந்து தர்மத்தில் பிரச்னைகள் வரும்போது, பெரிய குருமார்கள் பிரச்னைக்கு தீர்வு காணுவார்கள். எந்த தர்மமாக இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். கடந்த இருநூறு ஆண்டுகளில் இந்து தர்மத்திற்கு வந்த சோதனை என்பது அளவற்றது. இந்தியாவை பொறுத்தவரை இரண்டே மதங்கள். ஒன்று இந்துக்கள், மற்றொன்று இந்துக்களாக இருந்தவர்கள். எல்லாம் மதமும் சம்மதம் என்ற நிலைப்பாட்டில் உள்ள இந்துவிற்கு, எந்த மதத்தை பார்த்தும் பயம் கிடையாது.

சிக்காகோ மகாணத்தில் நடைபெற்ற மாநாட்டில் விவேகானந்தர் பேசியபோது, எனக்கு முன்பு பேசிய 18 பேரும் மதத்தை குறித்து பேசினர். அதனால் மதம் குறித்து பேச வேண்டியுள்ளது. நான் மதத்திற்கு எல்லாம் தலைமை மதமான, இந்து மதத்தை சார்ந்தவன் என்றார். இது இந்து மதத்தின் வாழ்வியல் முறையையும், பெரும் தாக்கத்தையும் உலகம் முழுவதும் ஏற்படுத்தியது. இந்து மதத்தில் எப்படி வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் வழிபடலாம். ஆனால் மற்ற மதத்தில், பல்வேறு கட்டுபாடுகள் உள்ளன. இந்து மதம் குறித்து மற்றவர்களால் அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இதனை பயன்படுத்தி மத மாற்றங்கள் பெரியளவில் நடைபெற்றது. இதுபோன்ற நேரங்களில், சின்மயானந்தா போன்றவர்கள் இந்து மதத்திற்காக தங்களை அர்பணித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்திருந்தார். அப்போது, சின்மயா மிஷன் சமஸ்கிருத்திலுள்ள பகவத் கீதையை, தமிழ் மொழியில் ஒலியாக மாற்றி பிரதமரால் வெளியிடப்பட்டது. இதை அனைவரும் கேட்க வேண்டும். கீதையின் ரகசியம் என்ன என்ற புத்தகத்தை பாலகங்காதரர் திலக், பர்மா சிறையில் இருக்கும்போது எழுதியுள்ளார். யார் அகிம்சையை கடைபிடிக்கிறார்களோ, அவர்கள் கீதையின்படி வாழமுடியும் என மகாத்மா காந்தி கூறுகிறார். விவேகானந்தா கூறும்போது, எந்த வேலையை செய்தாலும் எதிர்பார்ப்பின்றி செய்ய வேண்டும் என கீதையை கோடியிட்டு காட்டுகிறார்.
திருப்பதி எழுமலையான கையில் கீதையின் 18வது அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும். பகவத் கீதை தற்போது சாதரண மக்களுக்கு சேரும் வகையில் பலரும் பாடுபட்டு வருகின்றனர். நாமும் பகவத் கீதையை படிக்க வேண்டும். அதற்கு முதலில் சமஸ்கிருத மொழியை முழுமையாக கற்ற வேண்டும். நாகையில் அவதரித்த அதிபத்த நாயனாரை சிவன் உருவத்தில் பார்த்து வருகிறோம். எதையும் எதிர்பார்க்காமல் தனது பணியை செய்தால் கடவுள் அனைத்தையும் வழங்குவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக அதிபத்த நாயனார் உள்ளார்.

கிராமங்களில் பொருளாதாரம் இருக்க வேண்டுமானால் கோயில்கள் அவசியம். ராஜா ராஜா சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களை கட்டி பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளார்.சின்மயா மிஷன் 50 கோயில்களுக்கு கும்பாபிஷேம் நடத்தியது 500 ஆக உயரவேண்டும் என்றார். முன்னதாக மாணவர்களின் பகவத் கீதை பாராயணம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.