சிவகங்கை மாவட்டத்தில் அரசு திட்டங்களை வழங்க தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று சிவகங்கை பல்வேறு இடங்களில் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.

அதன் முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கானூர் பகுதியில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் இணைந்து நேரில் பார்வையிட்டார்.

அதன்பின் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்ட அரங்கத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை முடித்துக் கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு கொண்டிருந்தது. அவர்களோடு குறைகளை கேட்டு அறிந்தார் .

பின்னர் மாணவர்களோடு சேர்ந்து அவரும் மதிய உணவு சாப்பிட்டார். மாணவர்களோடு சகஜமாக பேசி குறை நிறைகளை கேட்டுக் கொண்டே உணவு அருந்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் உள்ள அறைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து கழிப்பறை குளியலறை உணவு கூடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் கூட்டத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.