உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங்யாதவ் மருத்துவமனையில் அனுமதி. பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) கடந்த சில நாட்களாக குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று, அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சித் தலைவரும் முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவிடம் பேசிய பிரதமர் மோடி, முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து விசாரித்தார். முலாயம் சிங் யாதவ் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும், சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.